இரட்டையர்கள் என்றாலே இரட்டிப்பு மகிழ்ச்சிதானே!. ‘கடவுளின் தேசம்’ என்றழைக்கப்படும் கேரளாவின், கொச்சியில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள கிராமம்தான் “கொடின்ஹி”. இந்த கிராமத்தினுள் நுழையும்போது, ‘Welcome to God’s own country of twins’ என்று ஒரு வாசகம் இருப்பதைக் காணமுடியும். இந்த கிராமத்தில் 2,000 குடும்பங்கள் உள்ளன. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி அந்த குடும்பங்களில் 400 ஜோடி இரட்டையர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர் என கண்டறியப்பட்டிருக்கின்றது.
ஒட்டுமொத்த இந்தியாவில் இரட்டையர்கள்
ஒட்டுமொத்த இந்தியாவிலும் 1,000 பிறப்புகளுக்கு 9 இரட்டையர்கள் என்ற விகிதத்திலேயே இருக்கிறது. ஆனால் கொடின்ஹி இதில் விதிவிலக்கு. இங்கு 1,000 பிறப்புகளுக்கு 45 இரட்டையர்கள் என்ற அளவில் பிறப்பு இருக்கிறது. இது உலகில் அதிகமான ஒன்றாகும்.

இரட்டையர்கள் பிறக்க மரபணு காரணமா? அறிவியல் விளக்கம்
பொதுவாக, உலகெங்கிலும் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு செயற்கை கருவூட்டல் ஒரு காரணம். கொடின்ஹி பொறுத்தவரை, அக்டோபர் 2016 இல், சி.எஸ்.ஐ.ஆர்-மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (CSIR-Centre for Cellular and Molecular Biology, Hyderabad), ஹைதராபாத், கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம் (Kerala University of Fisheries and Ocean Studies (KUFOS)) மற்றும் லண்டன் மற்றும் ஜெர்மனி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த நிகழ்வை விசாரிக்க இக்கிராமத்திற்கு வருகை தந்தனர். ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த பகுதி மக்களின் உமிழ்நீர் மற்றும் முடி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்குட்படுத்தினர்.
சில ஆராய்ச்சியாளர்கள், மரபியல் ரீதியாக இல்லாமல், இது கிராமத்தின் காற்றிலோ அல்லது நீரிலோ இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட தன்மையினால் இருக்கலாம் என்று கூறியுள்ளனர். வேறு சில ஆராய்ச்சியாளர்கள், கிராமவாசிகளின் உணவு பழக்கத்தினால் உண்டானதாக இருக்கலாம் என்கிறார்கள். பல ஊகங்கள் இருந்தாலும், இதுவரை அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. கிராமத்தின் அதிக அளவிலான இரட்டையர்கள் மர்மத்தை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மரபணு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியுலகுக்கு வந்தது
இரண்டு இரட்டை சகோதரிகளின் ஆர்வமே இதனை வெளி உலகுக்கு கொண்டுவந்திருக்கிறது. அவர்கள் ஒருநாள், தங்கள் வகுப்பிலேயே எட்டு ஜோடி இரட்டையர்களும், தங்கள் பள்ளியில் 24 ஜோடி இரட்டையர்களும் இருப்பதை உணர்ந்தனர். இதுதான் கண்டுபிடிப்பின் தொடக்கம். செய்தி பரவியதும், கொடின்ஹியில் கிட்டத்தட்ட 280 ஜோடி இரட்டையர்கள் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இது கோடின்ஹியின் இரட்டையர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கும் ‘டகா’ (TAKA- Twins and Kin Association), அமைப்பின் பிறப்புக்கும் வழிவகுத்தது.
உலகின் இரட்டையர்கள் தலைநகரம்
இரட்டையர்கள் பற்றிய மர்மம் கொண்ட உலகின் முதல் கிராமம் அல்ல கொடின்ஹி. வியட்நாமில் ஹங் நகரம் (Hung Loc Commune), நைஜீரியாவில் இக்போ-ஓரா (Igbo-Ora), பிரேசிலின் கேண்டிடோ கோடோய் (Candido Godoi) போன்ற இடங்கள் எல்லாம் இருக்கின்றன. “உலகின் இரட்டையர்கள் தலைநகரம்” என்று அழைக்கப்படும் இக்போ-ஓராவில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டையர்களைக் கொண்ட குடும்பங்கள் பல உள்ளன. கேண்டிடோ கோடோயில், இரட்டையர்களை பார்ப்பது என்பது வழக்கமான ஒன்று. ‘இந்த ஊரில் இரட்டையர்கள் இல்லை என்றால்தான் அது ஆச்சர்யமான செய்தி’ என்று இந்த ஊரைச் சேர்ந்த இரட்டையர்கள் கூறுகிறார்கள்.
Also Read: கருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!