பருவமழைக் காலங்களில் நாம், பச்சை அலெர்ட், மஞ்சள் அலெர்ட், ஆரஞ்ச் அலெர்ட் மற்றும் ரெட் அலெர்ட் என விதவிதமான அலெர்ட்டான வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழைக் காலங்களில் மழை பெய்வது தெரியும். அது என்ன கலர் கலராக அலெர்ட்? இந்த கேள்வி வெகுநாட்களாக எல்லோருக்கும் இருந்து வருகிறது. செய்திகளில் “வானிலை அறிக்கை” பற்றி சொல்லும்போது, இந்த அலெர்ட்கள் என்ற வார்த்தைகளே எச்சரிக்கையுடன் கலந்த பயத்தை உண்டாக்குகிறது.
அலெர்ட்
மக்களிடம் வானிலை குறித்த எச்சரிக்கை உணர்வைத் தூண்டுவதற்கு இந்த அலர்ட் முறை பயன்படுகிறது. வானிலை நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களை குறியீடாக வைத்து எச்சரிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன.

ரெட் அலெர்ட்
வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். பொதுவாக நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.
பச்சை எச்சரிக்கை
பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.
மஞ்சள் எச்சரிக்கை
வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
அம்பர் எச்சரிக்கை
பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நலம்.
சிவப்பு எச்சரிக்கை
மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்.