உலகளாவிய காற்று மாசுபாட்டில் ரயில் வண்டிகளின் பங்கு கணிசமானது. டீசல் என்ஜின்களால் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்க வளர்ந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் ஜெர்மனி சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கியிருக்கிறது. மற்றைய ரயில்களைப் போல் கரியமிலவாயு வெளியேற்றம் சிறிதளவும் இப்புதிய ஹைட்ரஜன் ரயிலில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு. வரும் 2021 – ஆம் ஆண்டு இந்த ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாடு
போக்குவரத்துத் துறைகள் தான் காற்று மாசுபாட்டின் மூலக் காரணம். காற்று மாசுபாட்டில் 73 % புகை வாகனப் பயன்பாட்டினால் வருகிறது. இதனைக் குறைக்கப் பல நாடுகளும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதன் நீட்சியாக ஜெர்மனி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் ரயில்களைத் தயாரிக்க இருப்பதாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இதற்கென பிரான்ஸைச் சேர்ந்த அல்ஸ்டாம் (Alstom) நிறுவனத்துடன் ஜெர்மனி அரசு ஒப்பந்தம் போட்டது. லித்தியம் மின்கலன் மூலம் இயங்கும் ரயிலைத் தயாரிக்கும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது. மணிக்குச் சராசரியாக 96 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயிலின் தயாரிப்புப் பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் வடக்கு ஜெர்மனியில் ஹைட்ரஜன் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.
லித்தியம் மற்றும் ஹைட்ரஜன்
அலைபேசிகளில் இருக்கும் லித்தியம் மின்கலங்கள் போலவே இந்த ரயிலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மின்கலனில் இருக்கும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் ஏற்படும் வேதிவினையின் காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத்தின் மூலம் இந்த ரயில் அதிகபட்சமாக 497 மைல் வரை பயணிக்கலாம். வேதிவினையினால் நீராவி மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

டீசல் ரயிலுடன் ஒப்பிடுகையில் இந்த ஹைட்ரஜன் ரயிலின் விலை மிக அதிகம். ஆனாலும், டீசல் ரயிலை விட அதிக காலம் இதனைப் பயன்படுத்த முடியும். மேலும், பராமரிப்புச் செலவு குறைவு தான் என்கிறார்கள் அதிகாரிகள். எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க இருப்பதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருக்கிறது.