பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பணப்பரிமாற்றத்தை எளிதாக்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்தின. சமீப காலமாக ஆன்லைன் திருடர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது தினமும் நாம் படிக்கும் செய்தியாகிவிட்டது. தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பாதுகாப்பு வசதி குறைவானவை. இதுவரை பதிவான ஆன்லைன் முறைகேடுகளை விசாரித்ததன் மூலம் இது தெரிய வந்திருக்கிறது. இதனால் புதிய பாதுகாப்பு அம்சம் கொண்ட கார்டுகளை அந்தந்த வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது. வரும் டிசம்பர் 31 – ஆம் தேதிக்குள் பழைய கார்டுகளை மாற்ற அவகாசம் தரப்பட்டுள்ளது.
பழைய கார்டில் என்ன பிரச்சனை ?
தற்போது புழக்கத்திலிருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் காந்தப் பட்டை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். கார்டின் விளிம்பில் கருப்பு நிறத்தில் இருப்பதே காந்தப் பட்டை (Magnetic Strip). அதில் சிறிய காந்தத் துகள்களின் வாயிலாக நமது தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவையாவும் நிலைப்படுத்தப்பட்ட தகவல்கள் எனப்படும். இவற்றை எளிதாக ஆன்லைன் திருடர்கள் ஹேக் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் நம் கார்டை நகலெடுக்கும் அளவிற்கு திருட்டுத் தொழில் அமோகமாக நடைபெறுகிறது.

புதிய பாதுகாப்பு அம்சம்
இனி மாற்றம் பெரும் கார்டுகளில் EMV என்னும் சிப் பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள தகவல்கள் வங்கிக் கணக்குடன் மறையாக்கம் (Encrypted) செய்யப்பட்டிருக்கும். கார்டின் மேற்பகுதியில் தங்க நிறத்திலான பட்டை ஒன்று கொடுக்கப்பட்டிருப்பதே EMV ஆகும். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நன்கு இலக்க ரகசிய எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே கார்டை பயன்படுத்த முடியும். இது வங்கியுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இதனை ஹேக் செய்வது நடக்காத காரியம் என்கிறார்கள் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

விண்ணப்பிப்பது எப்படி ?
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கு தங்களுடைய பாஸ்புக்கை எடுத்துசென்று அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தாலே போதுமானது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கென தனி கட்டணம் ஏதும் கிடையாது. எனவே கடைசி தினம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே மாற்றிவிடுவது சிறந்தது.