பிரபல சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக்கில் இருந்து 5 கோடி வாடிக்கையாளரின் தகவல்களை ஹேக்கர்கள் திருட முயற்சித்திருக்கின்றனர். இதனை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. “View as” என்னும் வசதியினைப் பயன்படுத்தி இத்திருட்டு அரங்கேறியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நேரம் வரையிலும் இந்த திருட்டுவேலையில் ஈடுபட்டவர்களைப் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை.

5 கோடி கணக்குகள்
பேஸ்புக்கில் நண்பர்களுடைய தகவல்கள் மற்றும் புகைப்படத்தினைக் காண்க உபயோகப்படுத்தப்படும் View as வசதி மூலம் தகவல் திருட்டு நடைபெற்றிருக்கிறது. பேஸ்புக் செயலி உபயோகத்தின்போது பின்திரையில் உள்ள செயலிகளை திருடர்கள் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். அதன்மூலம் வாசகர்களின் அலைபேசியில் உள்ள தகவல்களை திருடர்கள் எடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.
அவசர முடிவுகள்
பாதுகாப்புப் பிரிவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்தத் திருட்டு பற்றிய சந்தேகம் வந்ததும் 9 கோடி கணக்குகளை பேஸ்புக் நிறுவனமே அதன் இணைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டித்துவிட்டது. இதனால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மேலும் தகவல் திருட்டு பற்றிய சந்தேகம் வந்தவுடனேயே தாக்குதலுக்கு உட்பட்ட 5 கோடி கணக்குகளையும் முடக்கிவிட்டது பேஸ்புக். இதன்மூலம் கணக்குகளை திருடர்களால் இயக்கமுடியாமல் செய்திருக்கிறார்கள் பேஸ்புக் வல்லுநர்கள். அதோடு View as வசதியை நிறுத்திவிட்டது அந்நிறுவனம்.

பெரிய திருட்டு
பேஸ்புக் வரலாற்றில் இதுதான் பெரிய திருட்டு முயற்சி. உலகமெங்கிலும் பல ஹேக்கர்கள் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் தகவல்களைத் திருடுவதில் தீவிரம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய பாதுகாப்பு அம்சங்களையும் நடைமுறைப்படுத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்திருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
தடுக்க என்ன வழி ?
தங்களுடைய கணக்குகளை வாடிக்கையாளர்களே பாதுகாப்பான முறையில் பயன்படுத்த அறிந்துகொள்ளுதல் அவசியம். குறிப்பாக பேஸ்புக் செயலி பயன்பாட்டில் இருக்கும்போது மற்ற செயலிகளை நிறுத்திவிடுவது சிறந்தது. பயன்படுத்தி முடித்த பின்னர் பேஸ்புக் செயலியை Logout செய்துவிட வேண்டும். நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். தங்களுடைய கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றிவிடுவது நல்லது.