ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த யுவ்ராஜ் சிங் தனது ஓய்வு குறித்து பிசிசிஐ உடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 2000 ஆம் ஆண்டு கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் அறிமுகமானார் யுவராஜ்சிங். பல இக்கட்டான சூழ்நிலையில் அணியை சரிவில் இருந்து மீட்டவர் என்ற பெருமை யுவராஜையே சேரும். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் யுவராஜ் சிங் தனது அபார திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலுமே ஜொலித்தார் யுவராஜ். அந்த உலக கோப்பை தொடரின் நாயகனாகவும் யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு கடும் முயற்சிகளுக்குப் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். ஆனாலும் பழைய யுவராஜ் சிங்கை அவரது ரசிகர்கள் மிஸ் செய்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிய பின்னர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து பின்னர் அங்கேயும் கழற்றி விடப்பட்டார். கடைசி ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிய யுவராஜ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பளித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்.

இந்நிலையில் சர்வதேச மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பிசிசிஐ அமைப்புடன் பேசி வருவதாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு யுவராஜ் சிங் அனுமதி கோரி உள்ளதாக தெரிகிறது. அப்படி அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கனடா, அயர்லாந்து, ஹாலந்து மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாடுவார். யுவராஜ் சிங் பற்றிய இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.