உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் கேதர் ஜாதவ் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதிலாக யாரை சேர்ப்பது என்ற குழப்பம் பிசிசிஐ நிர்வாகத்தை கலக்கமடைய வைத்தது. ஒருவேளை ஜாதவால் அணிக்கு திரும்ப முடியாமல் போகும்பட்சத்தில் அம்பத்தி ராயுடு அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கேதர் ஜாதவ் குணம் பெற்று விட்டதாகவும் அவர்அணிக்கு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு எத்தனை தடவைதான் அடிபடும் என்னும் படி கேதர் ஜாதவ் என்றாலே காயமும் கட்டும் தான். சென்ற வருடம் ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஜாதவ் காயம் காரணமாக வெளியேறி மீண்டும் ஆசிய போட்டிக்குத்தான் இந்திய அணியில் இணைந்தார். இந்த முறையும் அதே கதைதான். பயிற்சியின் போது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரிலும் பாதியிலேயே வெளியேறினார் ஜாதவ். இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாடவில்லை.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் காயத்திலிருந்து குணமடைந்து அவரால் அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கேள்வி கேள்வியாகவே இருந்தது. தற்போது அதற்கு இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் மருத்துவர்கள் பதில் அளித்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த உடற்தேர்வில் ஜாதவ் தேர்ச்சி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 22ஆம் தேதி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ஜாதவும் இருப்பார் என நம்பப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மிடில் ஆர்டரில் ஜாதவ் போன்ற வீரர் நிச்சயம் கைகொடுப்பார் என்று தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இங்கிலாந்து போன்ற கடினமான பிட்ச்களில் அதிகநேரம் களத்தில் தாக்குப்பிடிக்கும் வீரர்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள். கடந்த ஐபில் தொடரில் ஜாதவ் பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை. அடுத்து காயம் மற்றும் ஓய்விற்கு பிறகு அணிக்குத்திரும்பும் ஜாதவ் சாதிப்பாரா சறுக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.