ஐ.பி.எல் தொடரின் நேற்றய ஆட்டத்தில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் மோதின. தொடர் தோல்விகளை சந்தித்திருந்த பெங்களூரு அணி கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஹாட்ரிக் வெற்றியைப் பெற முனைப்பு காட்டும் என ஏராளமான பெங்களூரு ரசிகர்கள் இப்போட்டியைக் காண வந்திருந்தனர். ராஜஸ்தானும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். இரண்டு அணிகளுமே மூன்று போட்டியில் வென்று ஆறு புள்ளிகளுடன் இருந்தன. நேற்றைய போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றதன்மூலம் முதன்முறையாக பட்டியலில் பெங்களூரு அணி ஒரு இடம் முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் விராட் கோலியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.
பெங்களூருவின் கேப்டன் கோலி 13 ரன்களில் வெளியேறினாலும் அடுத்துவந்த டிவிலியர்ஸ், ஸ்டோய்னிஸ் ஆகியோரின் அதிரடியால் அந்த அணி 202 ரன்களைக் குவித்தது. பெங்களூரு அணியைப் பொறுத்தவரை அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82* ரன்களும், ஸ்டோய்னிஸ் 46*, பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஷமி, எம்,அஸ்வின், ஆர்.அஸ்வின், வில்ஜியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பஞ்சாப் பேட்டிங்
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் நிதானமாக ஆட்டத்தை துவக்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இத்தனை பெரிய ஸ்கோரை கெயில் இல்லாமல் சேஸ் செய்வது மிக கடினமான காரியம். ஆனாலும் பின்னால் வந்தவர்கள் ஓரளவு சமாளித்தார்கள்.
லோகேஷ் ராகுல் 42 ரன்களிலும், மாயன்க் அகர்வால் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின்மூலம் 8 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி பெங்களூரு ஏழாவது இடத்தில் உள்ளது. இது அந்த அணியின் ஹாட்ரிக் வெற்றியாகும்.