ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதிய நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் எதிர்பார்க்காதது எல்லாம் நடந்தது. இந்த தொடரில் பெரிதாக சோபிக்காத ரஹானே அதிரடி காட்டினார். இந்த மனுஷனுக்குள்ளும் ஒரு ஃபயர் இருந்துருக்கு பாரேன் என்னும் அளவிற்கு 58 பந்துகளில் சதமடித்து அசத்தினார். உண்மையாகவே இது ரஹானே தானா? என ரசிகர்கள் சந்தேகப்படும்படியான ஆட்டம். இதனால் அந்த அணி 191 ரன்களைக் குவித்தது.
ரஹானே – ஸ்மித்
டாஸில் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது டெல்லி. ராஜஸ்தானின் துவக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சனும் – ரஹானேவும் இன்னிங்க்சைத் துவங்கினர். ஆனால் இரண்டாவது ஓவரிலேயே சாம்சன் ரன் அவுட் ஆகி டக்கில் வெளியேறி ஏமாற்றினார். இதனை அடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். ராஜஸ்தான் அணியின் புது கேப்டன் மற்றும் பழைய கேப்டன் இருவரும் டெல்லி பவுலர்களை சோதித்தனர். பவர் ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 52 ரன்கள் எடுத்தது. வலுவாக அமைந்த இந்த கூட்டணி 10 வது ஓவரின் இரண்டாம் பந்திலேயே அணியின் ஸ்கோரை 100 க்கு எடுத்துச் சென்றது.
31 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்மித் அடுத்த பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்தவர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். ஆனால் ரஹானே 105 ரன்கள் எடுத்து மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லியின் சமீப ஆட்டங்களில் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஒன்றும் செய்யவில்லை. பண்ட் ஒரு முறை மட்டும் 99 எடுத்ததோடு சரி. தவானை நம்பவும் முடியாது. இப்படியெல்லாம் நினைத்து டிவியை ஆப்செய்துவிட்டு தூங்கியவர்களுக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறது டெல்லி அணி.
192 ரன் எடுத்தால் வெற்றி. டெல்லியின் பிரித்வி ஷாவும், தவானும் ஓப்பனிங் செய்தார்கள். தரமான செய்கை. பழைய தவானின் ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது. பிரித்வியும் நன்றாகவே ஈடு கொடுத்தார். ஷிகார் தவண் 25 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அதன் பின்னர் ஷிகார் தவண் 54 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்னில் ரீயான் பராக் பந்தில் அவுட் ஆகினார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் பிரித்திவ் ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. நிலைத்து விளையாடிய பிரித்திவ் ஷா 42 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த ரூதர்போர்டு 11 ரன்னில் குல்கர்னீ பந்தில் அவுட் ஆகினார்.
ஜெய்க்கிரமோ இல்லையோ சண்டை செய்யணும் என வெற்றி தோல்வியை ஒதுக்கி வைத்துவிட்டு பண்ட் ராஜஸ்தான் பவுலர்களுக்கு சாத்துமுறை சாத்தினார். பண்டின் ஆர்க்கிற்குள் பந்துவந்தால் ஆறு தான் என அனாயாசம் காட்டினார். 36 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன் எடுத்து டெல்லியை வெற்றிபெறச் செய்தார் பண்ட்.
இதன்மூலம் 14 பாய்ண்டுகளோடு டெல்லி முதல் இடத்தில் இருக்கிறது. நெட் ரன் ரேட் வித்தியாசம் காரணமாக 14 புள்ளிகள் எடுத்த சென்னை அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.