ஐ.பி.எல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது.
மோசமான பேட்டிங்
டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார், முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு, வழக்கம்போல தவான் – பிரித்வி ஷா இணை துவக்கம் தந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்தை பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் துவக்கினார் பிரித்வி ஷா.
ஆரம்பத்தில் பவுண்டரிகள் கொடுத்தாலும் அதற்குப் பழிதீர்க்கும் விதமாக பிரித்வி ஷாவின் ஸ்டம்ப்களை சிதறடித்தார் புவனேஸ்வர் குமார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் மட்டும் நிதானமாக ஆடி 43 ரன்கள் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். கடைசி நேரத்தில் படேல் – மோரிஸ் ஆகியோர் காட்டிய அதிரடியினால் அந்த அணி 20 ஓவர் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.
எளிய இலக்கு
இதனை அடுத்து 130 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் – பேர்ஸ்டோ இணை சிறப்பாக ஆடி 64 ரன்களைச் சேர்த்தது. ஜானி பேர்ஸ்டோ வெளியேற, விஜய் சங்கர் களமிறங்கினார். 7-வது ஓவரில் வார்னரும் அவுட்டாக 8 ஓவர் முடிவில் 68 ரன்களைச் சேர்த்திருந்தது ஹைதராபாத். மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் கைகோத்தனர். ஆனால், இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
மனிஷ்பாண்டே இஷாந்த் ஷர்மா ஓவரில் அவுட் ஆகி வெளியேற ஆட்டத்தில் திடீர் பரபரப்பு ஒட்டிக்கொண்டது. ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த யூசுப் பதானும், நபியும் டெல்லியின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டனர். டெல்லி அணி சார்பில், சந்தீப், அக்ஸர் படேல், ரபடா, இஷாந்த் ஷர்மா, ராஹூல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.