ஐ.பி.எல் தொடரின் 12 -வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியைப் பொறுத்தவரை வாழும் வள்ளுவரான ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக மிட்ச்சல் சான்ட்னர் அணிக்குள் வந்திருந்தார். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதிர்ச்சியளித்த ஓப்பனிங்
சென்னையின் துவக்க ஆட்டக்காரர்களான வாட்சனும், ராயுடுவும் ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சில் தடுமாறத் தொடங்கினர். தவால் குல்கர்னி வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ராயுடு ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் வாட்சனும் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த ஜாதவும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி 4.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
இப்படியான இக்கட்டான நிலையில் ரெய்னா – தோனி இணை ஸ்கோரை உயர்த்த ஆரம்பித்தது. தனக்குக் கிடைத்த லூஸ் பால்களை வெளுத்துக் கட்டினார்கள் இருவரும். உனாட்கட் வீசிய ஓவரில் சிக்ஸர் அடிக்கப் பார்த்து தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் ரெய்னா (36 ). அடுத்து களத்திற்கு வந்த கரீபியக் குயில் பிராவோ தனது தனித்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிங்கிள் சிங்கம்
ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும் தோனி தனக்கான பந்துகளுக்காக காத்திருந்தார். அதே நேரத்தில் சிங்கிளும், டபிள்சும் எடுக்கத் தவறவில்லை. இப்படியாக 39 பந்துகளில் அரைசதமடித்தார் கேப்டன் தோனி. ஒரு நேரத்தில் 135 – 145 தான் இலக்காக இருக்கும் என நம்பிய ரஹானேவின் கனவுகளில் வெடிவைத்துத் தகர்த்தார் தோனி. உனாட்கட் வீசிய கடைசி ஓவரில் தோனி ருத்ரதாண்டவம் ஆடி அணியின் ஸ்கோரை 175 ஆக உயர்த்தினார்.
அங்கேயும் அதேதான்
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்திற்கு வந்த ரஹானேவை வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் சஹார். தொடர்ந்து 3வது ஓவரிலே சாம்சனும், பட்லரும் நடையைகட்ட 4 ஓவருக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணியைப் போலவே ஓப்பனிங் ஒத்துவரவில்லை ராஜஸ்தானிற்கு. ஆனால் அதன்பின்னர் இணைந்த ராஹூல் திரிபாதியும், ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
24 பந்துகளில் 34 ரன்களை சேர்ந்த திரிபாதியை 9 வது ஓவரின் இறுதி பந்தில் இம்ரான் தாஹிர் பெவிலியனுக்கு திருப்பினார். அடுத்துவந்த பென்ஸ்டோக்ஸ் தன்பங்கிற்கு ஆடிப்பார்த்தார். கடைசியில் 46 ரன்களுடன் அவரும் வெளியேறவே சிறிது நேரத்தில் ஸ்மித்தும் பெவிலியன் திரும்பினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணியால் 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக தோனி தேர்ந்தெடுக்கப்படார். தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றியை எட்டிப்பிடித்ததால் அட்டவணையில் 6 புள்ளிகளுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது.