CSK மேட்ச் என்றாலே அதன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் சேப்பாக்கத்தில் என்றால் அது வேற லெவல் சந்தோசம் தான். ப்ளே ஆப் சுற்றுக்குள் முதல்முறையாக வந்திருக்கும் டெல்லியும், ப்ளே ஆப் எல்லாம் எனக்கு பெரிய மேட்டர் இல்ல என்னும் சென்னை அணியும் நேற்று களம் கண்டன. ஒருவாரமாக தோனிக்கு காய்ச்சல் என்றதும் மொத்த அணியுமே நடுங்கிக்கொண்டிருந்தது. இடையில் மும்பையிடம் மட்டமான முறையில் அவுட்டான போதே சென்னை அணியில் தோனியின் பங்கு என்னவென்று தெரிந்துவிட்டது. நேற்றைய போட்டியில் தோனி டாஸ்ஸிற்கு இறங்கிவர மைதானமே அதிரும்படி கத்தினார்கள் CSK ரசிகர்கள்.
முதல் பேட்டிங்
டாஸில் கூட வெற்றியையே பெரும் தோனிக்கு நேற்று காயின் கைகொடுக்கவில்லை. டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று தோனியை பேட்டிங் செய்ய சொன்னார். போன மேட்சில் வாய்ப்பளிக்கப்பட்ட முரளி விஜய், துருவ் ஷோரே, சான்ட்னர் ஆகியோரை வெளியே உட்காரவைத்துவிட்டு தோனி, ஜடேஜா மற்றும் டுபிளேசி ஆகியோர் களமிறங்கினர். டெல்லி அணியும் மூன்று ஸ்பின்னர்களோடு களமிறங்கியது.
முதல் மூன்று ஓவர்களில் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டுபிளேசியும், வாட்சனும் என்ன செய்தார்கள் என அவர்களிடம் தான் கேட்கவேண்டும். பாட்ஷா ரஜினியைப் போல் முதல் மூன்று அடிகளுக்குப் பின்னால் ரிவென்ஜ் எடுப்பார்கள் என எதிர்பார்த்தால் வாட்சன் பெவிலியன் பக்கம் ஓட்டம் எடுத்தார். இதென்னடா இப்படி ஆகிடுச்சு என்று ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியால் முகத்தை மூடிக்கொண்டார்கள். அடுத்து வந்தது ரெய்னா.
இந்த தொடரில் சொதப்பல் பேட்டிங் பார்மில் இருந்த ரெய்னா வந்த முதலே விளாசத் தொடங்கினார். ரெய்னாவே அடிக்கும்போது நம்ம சும்மா இருந்தா திட்டுவானுக என்று நினைத்த டுபிளேசி தடவி தடவி ரன் சேர்த்தார். 39 ரன்களை சேர்த்தவுடன் அவரும் டாடா காட்டினார். அடுத்துதான் பெரிய ட்விஸ்ட். யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தோனி உள்ளே வந்தார்.
இது தோனி புயல்
நானா பார்மில் இல்லை இந்தா வாங்கிக்கோ என ரெய்னா வெளுத்துவாங்கினார். காலில் சுடுதண்ணியை ஊற்றியதைப் போல் வந்தவுடன் ஓடும் ரெய்னா நேற்று நிலைத்து ஆடினார். 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் மூலம் 59 ரன்கள் எடுத்த ரெய்னா அவுட்டான பிறகு அடுத்த ஷாக்.
பிளெம்மிங் எந்த நம்பிக்கையில் ஜடேஜாவை அனுப்பினார் என்று அனைவரின் மைண்ட்வாய்சும் வெளியே கேட்கும் அளவிற்கு கோபத்தில் இருந்த ரசிகர்களை கூல் செய்தார் ஜடேஜா. வெறும் பத்து பந்துகளில் 25 ரன்கள். திடீர் புயலாக வீசி பெவிலியன் திரும்பினார் ஜடேஜா. ஆனால் நிஜ புயல் களத்தில் நின்றுகொண்டிருந்தது. தோனி கிளவுஸை இறுக்கினார்.
போல்ட் னா பெரிய ஆளா? என அசால்ட் கட்டினார் தோனி. ஆஃப் கட்டர், ஸ்லோ பால், புல் லெங்க்த் என எப்படி பந்துபோட்டாலும் நான் அடிப்பேன் என சத்தியம் செய்திருந்தார் தோனி. கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்சர்களை தெறிக்கவிட்டு அணியின் ஸ்கோரை 179 ஆக மாற்றினார் தோனி.
சேப்பாக்கத்தில் இரண்டாவது இன்னிங்க்சில் டியு இருக்கும் எனவே எளிதாக சேஸ் செய்துவிடலாம் என்ற ஷ்ரேயாஸ் அய்யரின் கனவை தகர்க்க தோனியிடம் தெளிவான திட்டம் இருந்தது. ஒரு பவுண்டரி அடித்ததும் போதும் தம்பி கிளம்புங்க என பிரித்வி ஷாவிற்கு பெவிலியனுக்கு வழிகாட்டினார் சஹார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் அய்யர் – தவன் இணை சிறப்பாக ஆடியது. பவர் ப்ளே முடிவில் அந்த அணி 59 ரன்களை சேர்த்திருந்தது. இருவருமே நல்ல பார்மில் வேறு இருந்தார்கள். சென்னையின் கையை விட்டு மேட்ச் அங்குலம் அங்குலமாக நழுவிக்கொண்டிருந்த போது “நாங்க இருக்கோம்” என ஆதரவளித்தார்கள் ஸ்பின்னர்கள்.
காலை தூக்கினால் கண்டம் பண்ணிடுவேன்
ஹர்பஜனின் ஓவரில் ஸ்டம்ப்கள் தெறிக்க அவுட் ஆனார் தவன். அடுத்து வந்த எல்லோருமே ஒற்றைப்படை இலக்கங்களில் அவுட் ஆனார்கள். ஜடேஜாவின் ஓவரில் தோனி மாரிசை மின்னல்வேக ஸ்டம்ப் அவுட் செய்தார். இது எப்படி சாத்தியம் என்ற ஷ்ரேயாஸ் அய்யரிடம் இப்படித்தான் என அவரையும் அவுட் ஆக்கி கீப்பிங் னா இப்படி இருக்கணும் என பாடம் எடுத்தார் தோனி.
தீபாவளி முடிந்ததிற்குப் பின்னால் வெறும் துப்பாக்கியை வைத்து டுமீல் டுமீல் என சுடும் குழந்தை போல் அமித் மிஸ்ரா கையில் பேட் இருந்தது. ஆனால் எனக்கு தூக்கம் வருது முடிச்சுக்கலாம் என தாஹிர் மிஸ்ராவை முடித்துவிட்டார். விக்கெட் எடுத்த கையோடு ஓடிய தாஹிரை சென்னை அணி இன்னும் தேடுவதாக தகவல்.
ஒருவழியாக 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றிபெற்று மீண்டும் முதலிடத்தில் ஜம்மென்று உட்கார்ந்துகொண்டது. ஆட்டநாயகனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.