நடப்பு ஐ.பி.எல் சீசனின் 39-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனை அடுத்து பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராட் கோலியும், பார்த்திவ் படேலும் களம் இறங்கினர்.
படேலின் அரை சதம்
நல்ல பேட்டிங் பிட்ச். சிறிய பவுண்டரிகள் என பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் பெங்களூரு அணி தட்டுத்தடுமாறி ஆடியது. கேப்டன் கோலி (9) ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவிலியர்ஸ் பார்த்திவ் இணை சிறிது நேரம் தான் தாக்குபிடித்தது. 25 ரன்களில் டிவிலியர்ஸ் வெளியேற அந்த அணியின் சரிவு துவங்கியது. அக்ஷ்தீப் நாத் 24 ரன்னில் டுபிளேசியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய பார்த்திவ் படேல் 53 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் மொயின் அலி அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் 161 ஆக உயர்ந்தது.
சொதப்பிய சென்னை
சென்னை அணியின் துவக்கமே அந்த அணிக்கு துக்கமாக அமைந்தது. வாட்சன், ரெய்னா முதல் ஓவரில் அவுட் ஆக டுபிளேசி மற்றும் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர். அதன்பின்னர் ராயுடுவும் தோனியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 29 ரன்களில் ராயுடுவும் பெவிலியன் திரும்பினார்.
ஒன் மென் ஆர்மி
நான்கு ஓவர்களில் 60 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி தனது ஆக்ரோஷத்தைக் காட்டினார். இது பழைய கபாலி என நிரூபிக்கும் படியான ஆட்டம். சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக ஆடி கடைசி ஓவருக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தோனி அடுத்த பந்தை மைதானத்தை விட்டே வெளியே அனுப்பினார். அந்த ஓவரில் மூன்று சிக்சர்களை தெறிக்க விட்டதன் விளைவாக கடைசி பந்திற்கு இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்தப் பந்தை தோனியால் அடிக்க முடியாமல் போனது. இருப்பினும் எதிர் பக்கம் இருந்த தாக்கூரின் மோசமான ரன்னிங்கால் சென்னை அடுத்த விக்கெட்டை இழந்து தோல்வியைத் தழுவியது. கடசிவரை அவுட் ஆகாமல் இருந்த தோனி 48 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் அரங்கில் கேப்டனாக தோனி 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். மேலும் அதிக சிக்ஸர் (200 சிக்சர்கள் ) அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளார்.