நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று மாங்கனு மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நியூசிலாந்தையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா சாதனை புரிந்துள்ளது.

முக்கியமான மூன்றாவது போட்டி
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டி நியூசிலாந்து அணிக்கு மிக முக்கிய போட்டியாக கருதப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது. வழக்கம்போல் துவக்க ஆட்டக்காரர்களான மன்ரோவும், கப்திலும் சொதப்பினாலும் அடுத்துவந்த டெய்லர்(93) மற்றும் லாதம்(51) ஆகியோரால் அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 243 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. இந்தியா 3-0 என்ற கணக்கில் கோப்பையை தட்டிச்சென்றது.
இந்திய அணி பவுலர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் சஹால் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷமி மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

விளாசித் தள்ளிய இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்தியா ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் 28 ரன்னில் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி (60) – ரோஹித் (62) இணை அபாரமாக ஆடியது. நியூசிலாந்து பவுலர்களால் இந்திய அணியினரின் பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே வெற்றியின் பக்கம் இந்தியா சென்றுவிட்டது. மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி ஏழு ஓவர்கள் மிச்சமிருக்கும் போது வெற்றிக் கனியை எட்டிப்பிடித்தது. கடைசியில் தினேஷ் கார்த்திக்(38) – ராயிடு (40) இணை சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் இந்தியா 3-0 என்னும் கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
