ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. இரு அணிகளுமே ஐந்து போட்டிகளில் விளையாடி அதில் நான்கு போட்டிகளில் வென்று 8 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா முதல் இடத்திலும் சென்னை இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதில் வெற்றிபெறும் அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பேட்டிங்
சென்னை அணியைப் பொறுத்தவரை ஆரம்ப ஆட்டங்களில் சொதப்பிய ஓப்பனிங் டுப்ளேசியின் வருகையால் ஓரளவு நிதானம் பெற்றிருக்கிறது. மிடில் ஆர்டரில் தோனி, ஜாதவ் ஆகியோர் சிறப்பாகவே ஆடுகின்றனர். குறை சென்றால் சந்தேகமில்லாமல் ரெய்னா தான். இந்த தொடர் எதிலும் அவரால் ரன் அடிக்க முடியவில்லை.
கொல்கத்தாவின் பேட்டிங் பலம் வாய்ந்தது. சுனில் நரைன் அதிரடியை ஆரம்பிக்க, ரஸ்ஸல் அதனை சிறப்பாக முடித்துவைக்கிறார். நித்திஷ் ராணா, ராபின் உத்தப்பா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இக்கட்டான நிலையில் கைகொடுக்கின்றனர்.
பவுலிங்
சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை சுழல் பந்துகள் தான் ஆட்டத்தின்போக்கை மாற்றக்கூடியது என்பதால் இரு அணிகளும் அதற்கேற்ப மாற்றங்களை நிச்சயம் செய்யும். கொல்கத்தாவின் நரேன், சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சு அருமையாகவே உள்ளது. அதே நேரத்தில் சென்னை அணியிலும் தாகீர், ஹர்பஜன், ஜடேஜா போன்றோர் சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர்.

போட்டி சேப்பாக்கத்தில் நடப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம். கொல்கத்தா – சென்னை அணிகள் இதுவரை 18 போட்டிகளில் எதிர்த்து ஆடியிருக்கின்றன. அதில் சென்னை 11 முறையும், கொல்கத்தா 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை அணியின் ராசியான மைதானம் இது என்பதாலும் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.