விநாயகர் சதுர்த்தி – பிள்ளையாருக்குப் பிறந்த நாள்

Date:

இந்துக்களின் முழு முதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதி நாளன்று விநாயக சதுர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. அன்றைய நாளில் களிமண்ணினால் செய்த விநாயகருக்கு இனிப்புகள் படைத்து மக்கள் வழிபடுவர். இந்துக்களின் ஒவ்வொரு நற்செயலின் துவக்கத்தின் போதும் பிள்ளையாரை முதலில் வழிபடுவது வழக்கம். வெற்றிலையில் மஞ்சளைக் கொண்டு பிள்ளையார் பிடிக்கும் வழக்கமும் இருக்கிறது.

vinayagar
Credit: Cliparts Mania

வழிபாட்டு முறை

விநாயகர் சதுர்த்தி தொடங்கி அடுத்த ஒன்பது நாட்கள் வரை கொண்டாட்டம் தொடரும். இந்தியாவின் சில பகுதிகளில் 11 நாட்கள் வரை வழிபாடுகள் நடக்கின்றன. அங்கே இவ்விழா அனந்த சதுர்த்தி விழாவாகக் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாகக் களிமண்ணினால் செய்யப்பட்ட பிள்ளையாரை 30 நாட்கள் வரை தங்கள் பூஜை அறையில் வைத்து வணங்குவர் மக்கள். புரட்டாசி மாதம் சதுர்த்தி அன்று விருந்து படைத்த பின் குளத்திலோ, ஆற்றிலோ, கடலிலோ விநாயகரைக் கரைப்பார்கள். சிலர் விநாயக சதுர்த்தியின் அடுத்த நாள் புனர் பூஜையை முடித்த பின்னர் அருகிலிருக்கும் நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.

vinayagar
Credit: The Holiday India
அறிந்து தெளிக!
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற பெயர்களால் விநாயகர் அழைக்கப்படுகிறார்.

இனிப்புப் பிரியர்

இனிப்புப் பலகாரங்களை விரும்பி உண்ணும் விநாயகருக்கு சதுர்த்தி அன்று மோதகம், அவல், பொரி, சர்க்கரை, பச்சரிசி, கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் போன்றவற்றை படைப்பது வழக்கம். அதனால் தான் அவ்வையார் பிள்ளையாரை,” பேழை வயிறும் பெரும்பாட்டுக் கோடும்” என்று பாடினார். மண்ணினால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து மகிழ்வர்.

vinayagar
Credit: Subbus Kitchen

 

விநாயகர் விரதம்

சதுர்த்தி நாட்களில் விநாயகர் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாதாமாதம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது.

அறிந்து தெளிக!
வேழ முகன் தம் தந்தத்தில் ஒன்றினை உடைத்து மேருமலையின் மீது மகாபாரதத்தை எழுதியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. அதனாலேயே எல்லா விநாயகர் சிலையிலும் ஒரு பக்கத் தந்தம் சிறியதாகவும் மற்றொரு தந்தம் பெரியதாகவும் இருக்கும். 

விநாயகரை சதுர்த்தியன்று தொடர்ந்து வணங்கி வந்தால் 21 பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாமும் முழுமுதற் கடவுளை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவோம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!