இன்று மஹாளய அமாவாசை ஆகும். முன்னோர்களுக்குத் திதி கொடுக்கச் சிறந்த நாள். இன்றிலிருந்து இரண்டாம் நாள் அதாவது வரும் புதன் கிழமை நவராத்திரி பூஜை தொடங்குகிறது. நவராத்திரியின் 9 நாட்களும் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்னெ? எந்த தினத்தில் எப்படி வழிபட வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
- புரட்டாசி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்தல் வேண்டும்.
- வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலு வைத்தல் வேண்டும்.
- விரதம் இருப்போர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பின்பு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவைத் துறந்து இரவு பூஜை முடிந்த பின் பால், பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
- ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் விரதம் விடுதல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டு நாளும் பகல் ஒரு வேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
- விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பண்டங்கள் தயார் செய்து சக்திக்குப் படைத்தது , பூஜைக்கு வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
- இவ்விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
நவராத்திரியில் திருமகளைத் துதித்து வழிபடுவோர்களுக்கு தேவி சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது .
எந்த நாள் எப்படி வழிபாடு செய்வது ?
1. முதலாம் நாள்:- சக்தியை முதல் நாளில் சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே கோபமாக இருப்பவள்.
முதல்நாள் நெய்வேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள்:– இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துப் பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தைத் தாங்கியிருப்பவள். தனது தெத்துப் பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர் சாதம்.
3. மூன்றாம் நாள்:- மூன்றாம் நாளில் சக்தியை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். மகுடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தைப் பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள்:- சக்தித் தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். தீயவற்றை வதம் செய்பவள். இவளின் வாகனம் கருடன்.
நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள்:- ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.
6. ஆறாம் நாள்:- அன்று சக்தியை கவுமாரி தேவியாக வழிபட வேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தைத் தருபவள்.
ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய் சாதம்.
7. ஏழாம் நாள்:- ஏழாம் நாள் அம்மனை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடாரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் லட்சுமி .
ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள்:- அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபட வேண்டும். மனித உடலும், சிம்மத் தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.
எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள்:- அன்று அன்னையை சரஸ்வதி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்.
10 ம் நாள் விஜயதசமி.
9 நாட்களும் குறிப்பிட்டுள்ள ரூபங்களுக்கான காயத்ரி, அஷ்டோத்திரம்,பாடல்கள் படித்து தீபதூபம் காட்டி பிரசாதத்தினை அனைவருக்கும் வழங்க வேண்டும்.