செவ்வாய் கோளில் InSight தரையிறங்கும்
கௌண்ட்-டௌன்(Countdown)
தகிக்கும் வெப்பம், சுற்றிச் சுழலும் புழுதிப்புயல், கருணை என்பது துளியும் இல்லாத நிலம். செவ்வாய் கிரகத்தை இப்படித்தான் உருவகப்படுத்த முடியும்.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் மொத்த முயற்சியில் 40% சதவிகிதம் மட்டுமே வெற்றி பெறுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA குறிப்பிட்டிருக்கிறது. இருப்பினும் இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் NASA தனது செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியை மேம்படுத்தும் விதமாக இன்று Insight எனப்படும் தரயிறங்கு கலத்தினை செவ்வாயின் பரப்பில் நிலை பெற வைக்க இருக்கிறது.

பூமிக்கும் செவ்வாய்க்கு இடைப்பட்ட தூரம் காரணமாக இந்த இரு கிரகங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் கால தாமதம் ஏற்படும். உதாரணமாக விண்கலம் தரையிறங்கியவுடன் பூமிக்கு செய்தி அனுப்பும். ஆனால் 6 நிமிடங்கள் கழித்தே அத்தகவலை நாம் பெறமுடியும் என்பதால் கலத்தின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள 6 நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் . ஆங்கிலத்தில் 6 minutes of terror என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகம் என்பதனால் விஞ்ஞானிகள் அனைவருமே நகத்தைக் கடித்துக்கொண்டு இந்தத் தரையிறங்குதலுக்காக காத்திருக்கிறார்கள்.
InSight தரையிறங்கப்போகும் அனிமேஷன் காட்சி
செவ்வாய் கிரகமும் விபத்துகளும்
செவ்வாயின் வட கோளத்தில் புயல்கள் அதிகம் இருக்கும் இடத்திலேயே பெரும்பான்மையான விண்கலங்கள் தரையை அடைகின்றன. தரையை அடையும் பொது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல விண்கலங்கள் தரையில் மோதி சிதறியிருக்கும் பல வரலாறுகள் செவ்வாய்க்கு உண்டு.
தரையிறங்குதலில் சில படிநிலைகளே அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது. செவ்வாயின் வளி மண்டலத்திற்குள் விண்கலம் நுழைந்த உடனே அதன் பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் வெப்ப உமிழ் கலன் வெளிப்படும். அவை தொடர்ந்து நெருப்பு ஜூவாலைகளை வெளிவிடுவதன் மூலமாக விண்கலனின் வேகமானது குறைக்கப்படும். அதன்பின்னர் தரையிலிருந்து விண்கலம் 10 மைல் தொலைவில் இருக்கும்போது பாராசூட் திறக்கப்பட்டு அதன் துணையுடன் தரையில் வந்து சேரும்.
கடைசி 2 கிலோமீட்டர் தூரத்தின் போது பாராசூட் தாங்கிய பின்பாகமும் கழட்டி விடப்படும். விண்கலத்தின் உள்ளே இருக்கும் பேட்டரியால் இயங்கும் என்ஜின் விண்கலம் தரையினை அடைந்தவுடன் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். வினாடிக்கு 5.5 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Insight விண்கலம் தரையிறங்குவதை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். செவ்வாயின் வெளிவராத பல மர்மப்பக்கங்களை NASA வெளிக்கொண்டுவருமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். விண்கலம் தரையிறங்குவதை நேரடியாக பார்க்க எழுத்தாணி தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.