நமது பூமிக்கு இனிமேல் ஒரு நிலவு அல்ல. மூன்று நிலவுகள். ஆச்சரியமாக இருக்கிறதா ? உண்மை தான். பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதாக வானியல் நிபுணர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளனர்.
போலந்து வானியல் நிபுணர் காஸ்மிஜெர் கோர்திலெவ்ஸ்கி (Kazimierz Kordylewski), 1961 – ஆம் ஆண்டில் நிலவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தினார். அவரது கூற்றுப்படி, மேகங்களில் கடினமான 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை பூமியைச் சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது.
இது குறித்த வாதம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில் தான், பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர். அந்த இரு நிலவுகளும் தூசுகள் நிறைந்து காணப்படுவதாகவும், பூமியை சுமார் 250,000 மைல்கள் தொலைவில் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவற்றை முதன் முதலில் கண்டறிந்த ஆராய்ச்சியாளர் கோர்திலெவ்ஸ்கியின் (Kordylewsky) பெயரையே இந்த நிலவுகளுக்கு விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.
“அண்ட ஆகாய ஒளி, நட்சத்திர ஒளி, மேக ஒளி உள்ளிட்டவைகளைக் கொண்டு இந்த கோர்திலெவ்ஸ்கி மேகக்கூட்டங்களைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்று.” எனக் கூறுகிறார் வானியல் பேராசிரியரான காபோர் ஹார்வாத். இதுநாள் வரையில் இந்த மர்ம மேகக் கூட்டங்கள் மாயை என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சில நவீனக் கருவிகளை கேமராக்களில் பொருத்தி ஆராய்ந்ததில், அந்த மேகக்கூட்டங்களில் இருந்து சிதறும் ஒளியை பற்றி அறிய முடிந்திருப்பதாகவும் அவர் கூறிகிறார்.
ராயல் ஆஸ்ட்ரானாமிக்கல் சொஸைட்டி (Royal Astronomical Society ) இது தொடர்பாக மேலும் பல குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி,
- இந்த மேகக்கூட்டங்களின் அளவு பூமியை விட ஒன்பது மடங்கு பெரிதாக இருக்கிறது.
- இவை பெரிதாக இருந்தாலும் சிறு சிறு துகள்களால் ஆனவை.
- சந்திரனைப் போலவே இந்த மேகக்கூட்டத்திற்கும் சுயமாக ஒளிரும் திறன் கிடையாது.
- இவை சூரிய ஒளியைக் குறைந்த அளவில் பிரதிபலிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது.
- இவற்றிலிருந்து வெளிப்படும் ஒளி மிகக் குறைவாக இருப்பதால் இவற்றை நம் கண்களால் பார்க்க முடியாது.
சில நேரங்களில் சூரியனின் பிரதிபலிப்பு காரணமாக இந்தத் தூசி மேகங்கள் தோன்றியிருக்கலாம் எனவும், அதிலிருக்கும் தனித் துகள்கள் பிரதிபலிக்கும் சிதறடிக்கப்பட்ட ஒளி தான் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த மேகக்கூட்டங்களின் நிலைத்தன்மை, பூமியைச் சுற்றி வருதல், மற்றும் ஒளியைப் பிரதிபலித்தல் போன்ற காரணங்களால் இவை இரண்டும் நிலவுகளாக தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.