இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில்நுட்பத்தில் தொலைத் தொடர்புக்கான ஜிசாட்-29 (GSAT-29) என்ற செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் நேற்று மாலை 5.08 மணிக்கு, சென்னை அருகே உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ( GSLV-Mk 3 -D2) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

GSAT-29 சிறப்பம்சங்கள்
- ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை கடல்சார் ஆராய்ச்சி, தொலைதூரத் தகவல்களைப் பெறுவது, உயர் நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
- மூவாயிரத்து 425 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளில், அதிநவீன சக்தி கொண்ட டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஜிசாட்-29 செயற்கைகோளை நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-ஆவது செயற்கைகோள் ஜிசாட்-29 ஆகும்.
- இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 என்பது தனிச்சிறப்பு.
- கனரக வகையைச் சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 3.5 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு அனுப்ப முடியும்.
கஜா புயல் காரணமாக வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையால் ராக்கெட் ஏவப்படாது என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. மேலும், திட்டமிட்ட பாதையில் சரியாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் போய்க்கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Also Read: விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் இந்திய விண்கலம் ககன்யான்
பிரதமர் வாழ்த்து
ஜிசாட்-29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பது, இரட்டை மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை, இந்திய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், நமது நாட்டின் கிராமப்புற பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவை கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Also Read: சந்திரனில் விண்கலத்தைத் தரையிறக்கப் போவது யார்? – இஸ்ரேலுடன் போட்டி போடும் இஸ்ரோ