இப்போதெல்லாம் வாகன இரைச்சல் முதல் தொழிற்சாலை இரைச்சல் என பலவற்றை சமாளிக்க வேண்டி உள்ளது. அதை விட ஒரு ஆணி அடிக்கும் சத்தமே நமக்கு தலைவலி வரை கொண்டு போய் விட்டுவிடும். சிலருக்கு இரைச்சலால் டென்ஷன் அதிகமாகி கோபம் கூட வரும். அதுவும் இது போன்ற இரைச்சல் தான் காரணம் என தெரியாமலே!! சரி… கேட்க முடிந்த ஒலிகள் இவை. அதனால் கேட்கும் திறன் தொடர்பான பிரச்சனைகள் கூட வரும். மனித காதுகளுக்கு கேட்க முடியாத ஒலிகள் இருக்கே… அது பற்றி தெரியுமா? நம்மால் கேட்க முடியாத ஒலிகள் அது கூட நம் காதுகளை பாதிக்குமா?
இது பற்றி புரிந்து கொள்ள நாம் நமது காதுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், காதுகள் எப்படி ஒலிகளை கேட்டு உணர்கிறது என்பதையும் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
செயல்முறை

நமக்கு ஒரு சத்தம் கேட்பதற்கு முன்பு அந்த ஒலி அலைகள் நமது காதுக்குள் நுழைந்து செவிப்பறையை அடையும். இதனால் செவிப்பறை (Ear Drum) அதிரும். இந்த அதிர்வுகள் செவிப்பறை அருகில் இருக்கும் சிறு எலும்புகள் மூலம் உள் காது வரை செல்லும். உள் காதில் உள்ள நரம்பிழைகள் இந்த அதிர்வுகளை மின் வேதியியல் சிக்னல்களாக பரிமாற்றி, அவை மூளையுடன் தொடர்பு கொண்டு காதுக்கான முக்கிய பகுதியில், அந்த அலை உணரப்பட்டு பின்பு தான் அந்த ஒலி நமக்கு கேட்கும்.
ஆமாங்க! நம்ம காது செயல்படுவதும் ரொம்ப சிக்கலான செயல்முறையில் தான். அதாவது காதில் ஏதாவது ஒரு பாகம் பாதிக்கப்பட்டால் கூட நம் கேட்கும் திறனில் பல பிரச்சனைகள் வந்து விடும்.
60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தை தொடர்ந்து கேட்கும் போது, நமது செவிப்பறை கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்க ஆரம்பிக்கும்!!
மீயொலி
ஒலிகளின் அளவு எப்படி இருந்தாலும் சரி, மனிதர்களால் 20 முதல் 20,000HZ வரைக்கும் இருக்கிற ஒலிகளை மட்டும் தான் கேட்க முடியும். 20HZ க்கு குறைவான ஒலியையோ (குற்றொலி) 20000HZ க்கு அதிகமான ஒலியையோ (மீயொலி) கேட்க முடியாது. எடுத்துக்காட்டாக நிலநடுக்கத்தின் போது ஏற்படும் குற்றொலி. அதே போல வௌவால், திமிங்கலம், டால்பின் போன்ற உயிரினங்கள் எழுப்பும் மீயொலி. இவற்றை நம்மால் உணரவோ கேட்கவோ முடியாது. நம்மால் கேட்க முடியாத ஒலிகளில் சிலவற்றை யானை, நாய் போன்ற சில விலங்குகளால் கேட்க முடியும்.
ஆய்வு
இது போன்ற ஒலிகள் நம் காதுகளை பாதிக்குமா அறிய ஆராய்ச்சியாளர்கள் சில சோதனைகளை மேற்கொண்டு ஆராய்ந்துள்ளனர். அதன் படி ஒரு மனிதன் மிகக் குறைந்த அதிர்வெண் அலைகள் வெளிவரும் இடத்தில் இருக்கும் போது அது காதின் சாதாரண செயற்பாட்டில் ஒரு தற்காலிக இடையூறை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜெர்மன் ஆய்வில் 30HZ அதிர்வெண் ஒலியை பங்கேற்பாளர்களை 90 நொடிகளுக்கு கேட்க வைத்துள்ளனர். அவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை. எனினும் அவர்கள் காதுகளின் தன்னிச்சையான ஒலி உமிழ்வுகளை அளவெடுத்து பார்த்தனர். காதுக்குள் ஒலி அலைகள் செல்லும் போது செவிப்பறையில் ஏற்படும் அதிர்வுகள் தான் தன்னிச்சையான ஒலி உமிழ்வு எனப்படும். இவற்றை மைக்ரோபோன்கள் மூலம் மட்டுமே அளவிட முடியும். அவர்களுக்கு எந்த ஒலியும் கேட்கவில்லை என்றாலும் தன்னிச்சையான ஒலி உமிழ்வு அவர்களின் காதுகளில் ஏற்பட்டு இருந்தது.

சாதாரண சூழ்நிலையில் இந்த தன்னிச்சையான ஒலி உமிழ்வுகள் கிட்டத்தட்ட ஒரே அளவாக மாறிலியாக இருக்கும். ஆனால் இப்படி மிகக் குறைந்த அதிர்வெண் அலைகளை கேட்கும் போது அது சில ஏற்ற இறக்கங்களை ஏற்பட்டுள்ளது. ஏற்ற இறக்கங்கள் என்ற உடனே பாதிப்பு தான் என்று அர்த்தம் இல்லை. ஆனால் இது போன்ற ஒலிகள் மூலம் காதில் சில தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது உண்மை. உள் காதில் உள்ள நரம்பிழைகள் மிகவும் உணர்வு பூர்வமானவை என்பதால் இதே போல மீயொலிகளை கொண்டு மனிதர்களை ஆராய்ச்சி செய்வது கொஞ்சம் அபாயகரமானது. அதனால் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின் அடுத்த கட்டங்களுக்கு செல்லவில்லை.
மனிதர்களால் 20 முதல் 20,000HZ வரைக்கும் இருக்கிற ஒலிகளை மட்டும் தான் கேட்க முடியும்
நரம்பிழைகள்
கேட்க முடியாத ஒலிகள் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்னும் நிலையில் நாம் கேட்கும் ஒலியின் அளவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
மனிதர்களின் உள் காதில் உள்ள நரம்பிழைகள் மிகவும் சிறியவை. அதோடு அதிக உணர்வு மிக்கவை. இவை நாம் கேட்கும் அளவில் இருக்கும் வெவ்வேறு அதிவெண்களுக்கு ஏற்ப டியூன் ஆகும் என்பதால் இவை வளைந்தாலோ, உடைந்து விட்டாலோ, காதின் ‘கேட்கும் ஒலி அதிர்வெண் எல்லை’ சுருங்கி விடும். விளைவு, நாம் கேட்கும் சாதாரண ஒலியும் அதிக சத்தமாகவோ அல்லது குறைவாகவோ கேட்கும். அதே போல பாதிக்க பட்ட இழைகள் அருகில் உள்ள இழைகளையும் பாதித்து பாதிப்பை இன்னும் அதிகமாக்கும். ஆரம்பத்திலேயே கவனிக்கா விட்டால் முழுமையாக காது கேட்காமல் போகும் நிலை கூட வந்துவிடும்.
60 முதல் 70 டெசிபல் அளவுக்கு அதிகமான சத்தத்தை தொடர்ந்து கேட்கும் போது, நமது செவிப்பறை கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்க ஆரம்பிக்கும். இப்படி இவை சிதைவடையும் போது முதலில் காதில் அசாதாரணமான ஒலிகள் ஏற்படும். முதலில் விட்டு விட்டு இடையிடையே கேட்கும் இந்த ஒலி சிதைவுகள் அதிகரிக்க அதிகரிக்க தொடர் இரைச்சலாக கேட்கும். அதிக ஒலியின் காரணமாக நரம்புத்தளர்ச்சி, இதய நோய், மூளை பாதிப்பு கூட ஏற்படும்.

தீர்வுகள்
இந்த காரணங்களால் தான் தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மற்றும் வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலியை மட்டும் அரசாங்கம் அனுமதிக்கிறது. பட்டாசுகளுக்கும், ஒலி பெருக்கிகளுக்கும் கூட ஒலிகளின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த அளவை மீறும் போது தான் பாதிப்புகள் தொடங்கும்.
ஆனால் வாகனங்கள், தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் இரைச்சல் போதாது என்று சிலர் வீட்டிலேயே அதிக சத்தத்துடன் டி.வி. பார்ப்பது, ஹெட் போனில் முழு ஒலி அளவில் பாடல்கள் கேட்பது என காதுகளுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்போது தான் காது சம்பந்தமான பாதிப்புகளை தடுக்க முடியும்.