அணு குண்டு சோதனைகளின் போது வெளிப்படும் கதிரியக்க துகள்களால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்று தெரியுமா? அவை எவ்வளவு காலம் பூமியில் இருக்கும் தெரியுமா? உலகின் மிக ஆழமான இயற்கை அகழியான 10,994 மீட்டர் ( 36,070 ft) ஆழம் கொண்ட மரியானா கடல் அகழியில் இதற்கான விடை உள்ளது!!
Credit: Ease My Trip
ஆம்! ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அணு குண்டு சோதனைகளின் போது வெளிப்பட்ட கதிரியக்க கார்பன் மரியானா கடல் அகழியில் ஆழத்தில் வாழும் ஓட்டுமீன்களின் (Crustaceans) அல்லது Amphipods உடலில் இருப்பது தெரியவந்துள்ளது! இவை இறந்த உயிரினங்களையும் கடல் கழிவுகளையும் உண்ணும் உயிரினங்களாகும்.
ஆய்வு
ஒரு ஆராய்ச்சிக்குழு எப்படி தீவிர சூழ்நிலையிலும் கடல் உயிரினங்கள் அவற்றை தகவமைத்துக் கொள்கின்றன என்பதை அறிய சில ஓட்டுமீன்களை 2017 ஆம் ஆண்டு சேகரித்து சோதித்தனர். அப்போது தான் அவற்றின் குடல் மற்றும் தசை திசுக்களில் கார்பன் 14 மிக மிக அதிகமாக இருந்தது தெரியவந்தது. இந்த கார்பன் 14 கடல் நீரில் இருந்த கார்பன் 14 ( அணு சோதனைகளால் உருவானது) உடன் அப்படியே ஒத்துப் போனது. ஓட்டுமீன்கள் கடல் கழிவுகளை உட்கொண்டதால் கார்பன் 14 அப்படியே இவற்றின் உடலில் தங்கி விட்டது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சாதாரணமாக கடல் சுழற்சியின் மூலம் மட்டும் இந்த கதிரியக்க கார்பனை அகழியின் அடிப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால் கடல் உணவு சங்கிலியின் மூலமாக இந்த கதிரியக்க கார்பன் இவ்வளவு தூரம் வேகமாக பயணித்துள்ளது என்று விளக்கியுள்ளனர். மேலும் இந்த கார்பன் இந்த amphipodsகளில் (இறால் போல இருக்கும் உயிரினங்கள்) வழக்கத்துக்கு மாறாக மிக அதிக அளவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Credit: The Bulletin
கார்பன் 14
காஸ்மிக் கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் மற்றும் நைட்ரஜனுடன் வினை புரிந்து இயற்கையாக கூட கார்பன் 14 ( கதிரியக்க கார்பன்) உருவாகும். அதே போல கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களிலும் இயற்கையாகவே காணப்படும். அதைக் கொண்டு தான் விஞ்ஞானிகள் இறந்த ஒரு உயிரினத்தின் வயதை கண்டுபிடிப்பார்கள். ஆனால் அதன் அளவு மிக குறைவு.
1950 முதல் 1960 வரை நடந்த பனிப்போரில் செய்யப்பட்ட அணு சோதனைகளில் அணு குண்டுகள் வெளியிட்ட நியூட்ரான்கள் வளிமண்டலத்தில் காணப்படும் கார்பன் மற்றும் நைட்ரஜனுடன் வினைபுரிந்து கார்பன் 14 ன் அளவை இரட்டிப்பாக்கிவிட்டன. அதே சமயம் 1990 களில் கணக்கிட்ட போது வளிமண்டலத்தில் இந்த கார்பன் 14 அளவு 20 சதவீதம் குறைந்து இருந்தது. ஆனால் இந்த கார்பன் எங்கும் போகாமல் கடலுக்கடியில் தான் இருக்கிறது என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது.
சரியா தவறா?
இதில் இன்னொரு கோணமும் உள்ளது. இந்த கார்பன் கடலுக்கு வெகு ஆழத்தில் உள்ள உயிரினங்கள் உயிர் பிழைத்து வாழ உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில் கடல் உயிரினங்கள் அவற்றின் செல்களின் உள்ளே மூலக்கூறுகளை கட்டமைக்க கார்பன் 14 ஐ பயன்படுத்தும். இதனால் தான் அந்த உயிரினங்களால் அவ்வளவு ஆழத்தில் அதாவது கடுமையான அழுத்தத்தின் கீழ், உறைநிலை வெப்பநிலைகளில் அதோடு பெரிதாக உண்பதற்கு ஏதும் இல்லாத போதும் வாழ முடிகிறது.
Credit: Guardian
சொல்லப்போனால் இது போன்ற கடலின் வெகு ஆழத்தில் வாழும் ஓட்டுமீன்கள் மற்ற ஆழமில்லாத இடங்களில் வாழும் ஓட்டுமீன்களை விட அளவில் பெரிதாகவும் அதிக ஆயுளோடு இருக்கின்றன. கடல் அகழியில் ஆழத்தில் உள்ள Amphipods 10 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. அதுவும் இவற்றின் நீளம் 4 இன்ச்கள் ( 10 Cm). இதுவே ஆழமில்லாத இடத்தில வாழும் Amphipods 2 வருடங்களுக்கும் குறைவாக தான் வாழ்கின்றன. அவற்றின் நீளம் வெறும் 0.8 இன்ச்கள் (2 cm) தான்.
ஆழ்கடலில் வாழும் Amphipods குறைந்த வளர்ச்சிதை மற்ற விகிதம் கொண்டவை என்பதால் இவை ஆற்றலை அப்படியே சேமித்து வைத்து அதிக வருடங்கள் வாழ்கின்றன என்றும், இந்த அதிக வாழ்நாள் தான் அவற்றின் உடலில் கார்பன் 14 அதிகமாக சேர உதவியுள்ளது என்றும் கருதுகின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் இப்படி அதிக அளவு சேர்வது நன்மையை தீமையா என்பதே புரியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த கார்பன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகும் ஆழ்கடலிலும் அங்கு வாழும் கடல் உயிரினங்களின் வாழ்க்கையிலும் தலையிடுகின்றன. இதன் விளைவுகள் நல்லதா கெட்டதா என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை. எது எப்படியோ, நாம் செய்யும் விஷயங்கள் உயிரியல் அமைப்பை அதுவும் 10,000 மீட்டருக்கு (36,000 ft) அடியில் கூட பாதிக்கின்றன என்பதால் இது போன்ற நம்முடைய எதிர்கால திட்டங்களில் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.