உண்மையில் உயிர்க்கொல்லி என்பது எதிரி, நண்பன், குழந்தை, கிழடு என எதற்க்கும் பாரபட்சம் காட்டாமல் கெடுதல் செய்யும் ஒரு அரக்கனைப்போல, தான் தொட்ட அத்தனை ஜீவராசிகளையும் அவை உயிரோடு இருக்கும்போதே வதைக்கிறதே… அந்த நோயைத் தான் அவ்வாறு கூறமுடியும். அப்படி ஒரு நோய், 29 ஆண்டுகள் ஓய்வில் உள்ளது.

தீர்க்க முடியா நோய் ஒன்றே அதற்கு தகுதியானது என்றால் தீண்டாமையும் வறுமையையும் தான் அதற்கு பொருத்தமானவை. ஒருவேளை மனத்தை மலமாக்கும் பணம்தான் அந்த நஞ்சுயிரியோ?.
உயிர்க்கொல்லி நோயாக தோற்றிய பின்பு அக்கிருகி உடலை நீங்கிச் சென்றாலும் அதன் தடத்தை உடம்பில் அழிக்கமுடியா டேட்டூபோட்டு செல்லும் இந்த நோய் தான் கொரோனாவுக்கு முன்பு உலகத்தையே பதறவைத்தது! அந்நோய்தான் பெரியம்மை.
பெரியம்மை
கடும் வெப்ப அலையில் சிக்கி அல்லோலப்படும் இந்நாட்களில் உடம்போடு ஒட்டிய சூரியனைப் போல சுட்டெரிக்கும் இந்நோய் பற்றி யாராவது கூறக் கேட்டிருப்போம். அல்லது பாடப்புத்தகங்களில் சிலர் படித்துமிருப்போம். மூன்றாம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டு இந்த நூற்றாண்டில் கண்டுடெடுக்கப்பட்ட மம்மிகள் முதல் 3000 ஆண்டுகளாக மனித உயிர்குடித்து வந்த இந்நோய் இன்றைய பொழுதில் வரலாற்றில் மட்டுமே பார்க்க கிடைக்கிறது. ஆனால் பயோவெப்பனாக பயன்படுத்தும் வாய்ப்புள்ள இதற்கு மருந்துகள் என்பது சூன்யத்திற்கு மட்டுமே வெளிச்சம். பெரியம்மை, உலகின் முதல் அழித்தொழிக்கப்பட்ட நோய்.
வரலாறுகளை நிகழ்காலத்தில் படிக்கும்போது புனிதவெள்ளியில் உயிர்த்தெழும் இயேசு போல எழுந்து வந்த பெரியம்மை, தன் கோரப்பசி தீர்ந்தபின்னரே எல்லாம் வல்ல இறைவனால் ஒவ்வொரு முறையும் அழித்தொழிக்கப்பட்டதென்பது தெரியவருகிறது. இந்நோயினைப்போலவே இதன் பெயரின் பிறப்பும் வரலாற்றில் எட்டாத ஒன்று. ஆனாலும்15 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியத்தால் “smallpox” என்று அழைக்கப்பட்டது. அதுவும் மேகப்புண் (Great pox) எனப்படும் ஒருவகை வைரஸ் நோயிலிருந்து வகைப்படுத்தவே இப்பெயர் சூட்டும் விழா நடந்தேறியது.
எளிதில் தொற்றும் முற்றாக்கிருமி
எளிதில், மிக எளிதில் பரவக்கூடிய இந்நோய் பரவும் வேகம் உண்மையில் ஆமை போன்றது. சக நச்சுக்கிருமிகளான சிக்கன்பாக்ஸ், வைசூரி போன்ற நோய்களைக் காட்டிலும் மெதுவாகப் பரவக்கூடியது. அதாவது 15 முதல் இருந்து நாட்களுக்குப் பின்னர்தான் இதன் அறிகுறிகள் தென்படவே ஆரம்பிக்கும். சளி, ஈரம், தொடுதல், இருமல் போன்ற எளிய காரணங்கள் இதன் பரவலுக்கு போதுமானது. யாரெனும் இந்நோயை திட்டமிட்டு பிறருக்கு பரப்ப நினைத்தால் அவருக்கு அருகில் நின்று “நல்லாயிருக்கியாப்பா”? எனக்கேட்பதே போதுமானது. முழுக்க முழுக்க பிற உயிரினங்களுக்கு தீங்கு செய்யும் மனித இனத்திற்க்கு மட்டுமே இவை தீங்கு செய்பவை. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோர் எளிதில் இதன் இலக்காகக்கூடும் என்பது பெரியம்மை பற்றிய கோர உண்மை.

வழக்கம்போல இந்நோயுமே கடும் காய்ச்சலோடுதான் அஸ்திவாரம் இடுகிறது. பின்னர் ஒண்ட வந்த பிடாரியாக உடல்வலி குடியேரி ஊர்பிடரியாக முதுகில் உட்கார்ந்துவிடும். உடல் முழுவதும் அரிப்போடு சிவப்பு நிற தழும்புகள் உருவான பின்னர், சலம் கட்டிய கொப்புளங்கள் முகத்தில் ஆரம்பித்து மூன்று நாட்களுக்குள் கால்வரையிலும் தோன்றிவிடுகின்றன. சில இடங்களில் பெரிய புண்களும் உருவாகலாம். ஒவ்வொரு கொப்புளங்களுக்குள்ளும் லட்சக்கணக்கான “வாரியோலா மேஜர்” (variola major) கிருமிகள் இயங்கிக்கொண்டிருக்கும் அடுத்த கொப்புளத்திற்கு இடம்தேடி. கண்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு பார்வையிழந்தோர் ஏராளம். மூட்டு இடமாறுதல், மூட்டு வலி, முடங்கிய விரல்கள் போன்றன இறுதி வினைகள். “ வாரியோலா மைனர் “ என்று மேஜருக்கு ஒரு வகையுறவு உண்டு. பொதுவாக அதீத உயிரிழப்பு ஏற்படுத்துபவை மற்றும் அதிகமாக பரவக்கூடியவை இந்த மேஜர் ஜாதியைச் சார்ந்தவை. மேஜரில் உண்டாகும் பெரியம்மையில் மட்டுமே ordinary, modified, flat, hemorrhagic என நான்கு வகையான பிரிவுகள் உண்டு. அழிவில்லாத இக்கிருமி மெக்ஸிகோ நாட்டில் அஸ்டாக் எனும் நாகரீகம் முற்றிலும் அழிந்ததற்கு காரணமானதென்றால் இதுதானே ஒரு உண்மையான உயிர்க்கொல்லி .
சர்வதேசம் சர்வநாசம்
1950 களில் மட்டுமே 15 மில்லியன் மக்களை காவு வாங்கிய இந்நோய் அந்த இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே 500 மில்லியன் மக்களை கொன்று குவித்தது. இந்த எண்ணிக்கையானது இரண்டு உலகப்போரில் ஏற்பட்ட மரணத்தை விடவும் ஐந்து மடங்கு. போதாக்குறைக்கு அப்போதைக்குப் பல நாடுகளில் வறுமையின் தாக்கத்திலும் , போரின் மூர்க்கத்திலும் சிக்கி சுழன்றிக்கொண்டிருந்தன. 1952 ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்நோயை class -A நோயாக அறிவித்தது. அதாவது ஒரு நபருக்கு இந்நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும் கூட அதுவொரு Medical emergency ஆகக் கருதப்படும். உலக நாடுகள் முழுவதும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.
மருந்தாக வந்த நோய்க்கிருமி
ஏழ்மையாலும் சுகாதாரமின்மையாலும் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கா மக்களை அடிமை வியாபாரத்தில் ஈடுபடுத்தியதன் விளைவாக ஐரோப்பிய கண்டத்திலும் வட அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பியர் வருகையால் இந்தியத் துணைக் கண்டத்திலும் இந்நோய் பரவியது. 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாரியோலேசன் எனும் முறைமூலம் இந்நோய் தடுக்கப்பட்டு வந்தது. அதாவது நோய்த்தாக்கம் அடைந்தவரின் பொருக்கை எடுத்து அது காய்ந்தபின்னர், நோய் தாக்காமல் இருக்க பொடியாக்கி அதனை மூக்கில் உறிஞ்சிக்கொள்ள வேண்டும். 1796 ல் எட்வர்ட் ஜென்னர் இந்த நச்சுயிருக்கு மாற்று கிருமி கண்டறிந்தார். ஆனாலும் அதுவொரு தடுப்பு மருந்தே ஒழிய தவிர மாற்று மருந்து அல்ல. பொதுவாக பெரியம்மைக்கு மருந்தாக vaccinia எனும் கிருமி செலுத்தப்படுகிறது. இதுவும் ஒருவகையான pox வகைக் கிருமிதான் என்றாலும் பெரியம்மை அழிவிற்கு ஏதும் அபாயங்களை விளைவிக்காது. ஒரு சிலருக்கு இது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இக்கிருமி பெரியம்மைக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்க உதவிசெய்கிறது. 3 முதல் 5 ஆண்டுகள் வரை பெரியம்மை தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள இது போதுமானது. பின்னர் மீண்டும் மீண்டும் இதனை செலுத்திக் கொள்ள வேண்டும். 1972 க்கு பின்னர் இந்த முறையை முற்றிலும் அமெரிக்கா நிறுத்திக் கொண்டது. தற்போது மூன்றாம் தலைமுறை மாற்றுத்தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அடங்கியது ஆட்டம்
உலக நாடுகளின் தீவிர முயற்சி காரணமாக 1972 ஆண்டுக்குள் பெரியம்மை ஒழிக்கப்பட்டது. ஆனாலும் 1977 ஆம் ஆண்டில் சோமாலியாவில் ஏற்பட்ட நோய்த்தொற்று உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆய்வகம் ஒன்றில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒருவர் நோய்த்தாக்கி இறந்தார். இரண்டாண்டுகளுக்கு பின்னர் பெரியம்மை முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அரங்கில் அறிவிக்கப்பட்டது. பொதுவாக இரண்டு ஆண்டுகள் ஒரு நோய் எங்கேயும் வெளிப்படாது இருப்பின் அது முற்றிலும் அடக்கப்பட்டதாக கருதப்படும்.
பயோவெப்பன்
குடிமக்களுக்கு பெருத்த சுகாதாரக் கேட்டையும் அரசுக்கு பெருத்த இழப்பையும் ஏற்படுத்திய இந்நோய் அதன் அழிவின் தீவிரத்தன்மை காரணமாக “கிருமி ஆயுத” மாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது. எளிதில் பரவக்கூடிய இக்கிருமியை குடுவையில் பிடிப்பது சுலபமில்லை. ஒரு சில ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு பல்வேறு இடங்களில் இருந்த கிருமிகளும் அழிக்கப்பட்டு, ஒரு சில “வயல்” கள் மட்டுமே உலகில் இரண்டு இடங்களில் பாதுகாக்கப் படுகின்றன. ஒன்று அமெரிக்காவில் உள்ளது எனில் மற்றொன்று வேறெங்கே இருக்கும்? ரஷ்யாவில்தான்!. ஒருவேளை மீண்டும் வாரியோலா மேஜர் தாக்கம் ஏற்ப்பட்டால் ஒரு வாரகாலத்தில் அதனை ஒடுக்கிவிட மருந்துகள் உலகம் முழுவதும் தயார் நிலையில் இருக்கின்றன என்பது ஆறுதல்.