இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்களில் மிக முக்கியமானவர் லீவ் லேண்டா (Lev Landau). சோவியத் யூனியன் தலைமையின் கீழ் இருந்த அசர்பைஜான் நாட்டில் பிறந்தவர் லேண்டா. தந்தை எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர். குவாண்டம் மெக்கானிக்ஸில் அணி நிறையின் பயன்பாடு, ஃபெர்மி நீர்மம் பற்றிய கோட்பாடுகள், மிகைமின் கடத்திகளின் இயல்புகள் போன்றவை இவருடைய முக்கிய கண்டுபிடிப்புகளாகும். லேண்டாவின் 111 வது பிறந்தநாளான இன்று கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.

நண்பர்கள் இல்லா சிறுவன்
பள்ளிக்காலங்களில் கூச்ச சுபாவம் அதிகமுள்ள மாணவனாக இருந்த லேண்டாவிற்கு நண்பர்களே கிடையாது. மற்ற மாணவர்களோடு பேசுவதையே தவிர்ப்பவராகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் படிப்பில் படுசுட்டி. குறிப்பாக கணிதத்தில் அபாரமான ஆற்றலைப் பெற்றிருந்த இவர் தனது 13வது வயதில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டார். வெட்கப்படுபவன், அமைதியானவன் என்று சக மாணவர்கள் கிண்டலடித்துக்கொண்டிருந்த நேரத்தில் லெனின்கிராட் பல்கலைகழகத்தில் (Leningrad University) இயற்பியல் துறையில் சேர்ந்தார் லேண்டா.
திரவ நிலையில் இருக்கும் ஹீலியத்தின் அமைப்பு மற்றும் அவை நடந்துகொள்ளும்விதம் பற்றிய இவரது ஆராய்ச்சிக்கு (1962) நோபல்பரிசு வழங்கப்பட்டது.
ஈரணு மூலக்கூறுகளின் நிறப்பிரிகை குறித்த தனது முதல் ஆய்வுக்கட்டுரையை 18 ஆம் வயதில் சமர்பித்தார். இது பல்கலைக்கழக ஆசிரியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. தனது ஆய்வில் தீவிரமானார் லேண்டா. இதன்மூலம் 21 வது வயதில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று ஆசிரியர்களையே திகைக்கவைத்தார்.

ஊக்கத்தொகை
அணு ஆராய்ச்சியில் லேண்டாவுக்கு இருந்த திறமையை அந்த அரசு வெளிக்கொண்டுவர நினைத்தது. புகழ்பெற்ற ராக்ஃபெல்லர் (Rockefeller fellowship) அமைப்பின் உறுப்பினராகச் சேர்ந்தார் லேண்டா. சோவியத் அரசு லேண்டாவின் மேற்படிப்பிற்கு ஊக்கத்தொகை அறிவித்தது. இதனால் தன்னுடைய அடுத்த கட்ட ஆராய்ச்சியை ஸூரிச், கேம்பிரிட்ஜ் மற்றும் கோபன்ஹெகன் போன்ற இடங்களில் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இப்படி அறிவுத்தேடலில் இருந்த லேண்டாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வீடுதேடி வந்தது. நோபல் பரிசுபெற்ற ஆராய்ச்சியாளரும், அணு ஆராய்ச்சித்துறையில் ஜாம்பவானான நீல்ஸ் போரின் தலைமையில் இயங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. லேண்டாவின் புத்திக்கூர்மையை கண்டு போர் வியந்தார். குவாண்டம் தியரியில் லேண்டாவிற்கு இருந்த அசாத்திய அறிவு போரையே ஆச்சரியப்பட வைத்தது.

கண்டுபிடிப்புகள்
போரோடு கைகோர்த்த லேண்டா பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். குவாண்டம் இயக்கவியலில் அணி நிறையின் பயன்பாடு, நீர்ம – திட பொருள்களின் நிலை மாற்றங்கள், கின்ஸ்பர்க் உடன் இணைந்து மிகைமின் கடத்திகளின் இயல்புகளைக் குறித்து மிக முக்கிய ஆய்வினை மேற்கொண்டார் (Ginzburg – Landau theory of superconductivity). ஃபெர்மி நீர்மம் பற்றிய கோட்பாடுகள் இவரது தீவிர ஆராய்ச்சியின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் குளிர்ந்த, திரவ நிலையில் இருக்கும் ஹீலியத்தின் அமைப்பு மற்றும் அவை நடந்துகொள்ளும்விதம் பற்றிய இவரது ஆராய்ச்சிக்கு (1962) நோபல்பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டு லேண்டா உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது சோவியத் யூனியன்.
இயற்பியலின் அடிப்படைத் தத்துவங்கள் பலவற்றில் ஈடுபட்ட ஒரே நபர் லேண்டா மட்டுமே. இதனால் தான் அவருடைய பிறந்தநாளை கூகுள் இன்று கொண்டாடுகிறது.