MIT பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தானாகவே ஒளிரும் மரத்தை உருவாக்கியுள்ளனர். நானோ தொழில்நுட்பத்தின் மூலம் மரங்களை விளக்குகள் போல ஒளிரச்செய்யும் சாத்தியத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆய்வுக்காக அரசாங்கம் பெரும் தொகையை MIT பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் நகர்ப்புற விரிவாக்கம் உலகம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து நகரத்தில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததும் அப்போதுதான். இதனால் அதிகரித்த தேவைகளில் தவிர்க்க முடியாதது மின்சாரம். குறிப்பாக பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் பயணத்திற்கு மின்விளக்குகளை அமைக்க அந்தந்த அரசுகள் பல கோடி ரூபாய்களை வருடந்தோறும் செலவழித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தவே அமெரிக்க அரசு இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கிறது.
எப்படி தாவரங்கள் ஒளியை உமிழும்?
மின்மினிப் பூச்சிகள் மற்றும் ஜெல்லி மீன்களைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவை இரவில் தாமாகவே ஒளியை உமிழும். இவற்றின் உடம்பில் சுரக்கும் Bioluminescence என்னும் வேதிப்பொருள் தான் இந்த நிகழ்விற்கு காரணம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வேதிப்பொருள் சுரப்பு இந்த உயிரினங்களுக்கு தானாகவே அமைந்திருக்கிறது. அதாவது எந்தவித புறத்தூண்டல்களும் இன்றி இந்த செயல் நடைபெறுகிறது. இதே நடைமுறையைத்தான் ஆராய்ச்சியாளர்களும் பின்பற்றியிருக்கிறார்கள்.

முதல் தோல்வி
The Glowing Plant Kickstarter என்னும் அமைப்பு பூச்சிகளில் இருந்து ஒளிரும் தன்மையை தாவரங்களுக்கு கடத்துவதை சாத்தியமாக்க $4,80,000 செலவில் பிரம்மாண்ட ஆய்வுகளை முன்னெடுத்தது. ஆனால் இத்திட்டம் தோல்வியைத் தழுவியது. ஆனால் தற்போது டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளரின் உதவியால் MIT பல்கலைக்கழகம் இந்த முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இப்படியான தாவரத்தின் துணையோடு நான்கு மணி நேரம் இருளில் புத்தகம் வாசிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
லுஸிஃபெரஸ் எனப்படும் என்ஸைம்களில் லூஸிபேர் எனப்படும் மூலக்கூறுகள் இந்த தாவரத்தின் மரபணுவோடு இணைக்கப்படுவதால் தான் இந்த ஒளிரும் தன்மை தாவரத்திற்கு கிடைக்கிறது. இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. பொதுவாகவே இயற்கை நடைமுறையின் சிறிய மாற்றத்தை நாம் ஏற்படுத்தினாலும் அதன் சமநிலை கடுமையாக பாதிக்கப்படும். இதே ஆராய்ச்சியால் விதைப்பரவல் பாதிக்கப்படலாம். பறவைகளின் கூடுகளாக விளங்கும் மரங்கள் இவ்வாறு ஒளிரும் பட்சத்தில் பறவைகள் அதனை எப்படி எதிர்கொள்ளும்? மேலும் அவற்றால் மட்டுமே நிகழக்கூடிய விதை பரவலில் எம்மாதிரியான தாக்கம் இருக்கும் என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் விரிகின்றன.