கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம், மாடு முதலான எந்த விலங்குமே இல்லாமல் பால் தயாரிப்பதாக அறிவித்து பெருமளவில் முதலீட்டாளர்களையும், ரூ.165 கோடி முதலீடையும் ஈர்த்தது.
‘Perfect Day‘ என்ற அந்த நிறுவனம் 2014 ல் தொடங்கப்பட்டது. நீண்ட ஆராய்ச்சிக்குப்பின், சமீபத்தில் எந்த விலங்குமே இல்லாமல் பால் உற்பத்தி செய்வதற்கான காப்புரிமை பெற்றது. இதையடுத்து அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்த பாலை மக்களிடம் பெரிய அளவில் எடுத்துச்செல்ல மேற்கண்ட முதலீட்டை ஈட்டியது.
பால் சந்தையின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.1,08,000 கோடி. பசு, ஆடு, செம்மறி, எருமை, ஒட்டகம், கழுதை மற்றும் குதிரை போன்ற விலங்குகள் மூலமாகவே பெரும்பாலும் பால் பெறப்படுகிறது.
வெகு சில நிறுவனங்கள் மட்டுமே சமீப காலங்களில், விலங்குகள் தவிர்த்து சோயா முதலிய சில தாவரங்களில் இருந்து பால்-போன்ற திரவத்தை பெற்று பானங்கள் தயாரித்து வருகின்றன. தாவரங்களில் இருந்து பெறப்படுபவை பாலுக்கு உரிய புரதத்தையோ அல்லது வேறு எந்த குணங்களையோ கொண்டிருப்பதில்லை. அதனால், இவை பால் என்று வகைப்படுத்தப் படுவதில்லை. ஆனால், இவை மாற்று-பால் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன.
ஆனால், ‘Perfect Day’ என்ற இந்த நிறுவனம், முற்றிலும் விலங்குகள் இன்றி, தாவரமும் இன்றி பாலுக்கு உரிய புரதம் உட்பட அதே வேதியியல் கலவையோடு பால் தயாரிக்கிறது. தரமான செயற்கை முறையிலான பால் தயாரிக்கும் முறைக்கு இந்த நிறுவனம் காப்புரிமையும் பெற்றுவிட்டது.
எப்படி தயாரிக்கிறார்கள்?
இந்த நிறுவனம், உண்மையான பசுவின் பால் உற்பத்தி செய்ய நுண்ணுயிர் நொதித்தல் (Microbial Fermentation) என்றழைக்கப்படும் ஒரு செயல்முறையை பயன்படுத்திஅதில் வெற்றியும் கண்டிருக்கிறது, ஒரு மாடு கூட இல்லாமல்.
தற்போது உள்ள முறைப்படி பால் உற்பத்தி செய்ய நிறைய மாடுகள் வேண்டும். மாடுகளுக்கு உணவு தேவைக்கு பயிர்கள் வளர பெரிய/சிறிய நிலப்பகுதி தேவை. மாடுகளை கவனமுடன் கண்காணித்து வளர்க்க வேண்டும். சரியான நேரத்தில் தண்ணீர், உணவு, மருந்து கொடுக்க வேண்டும். மேலும், அவைகளை சினையாக்க வேண்டும். பிறகு, கன்று ஈனும் வரை காத்திருந்து, அதன் பின் மனிதத் தன்மையற்று, கன்றுகளை பிரித்து பால் கறந்து விற்க வேண்டும். சில மாதங்களுக்கு பிறகு பால் நின்றுவிடும். வயதான மாடுகளை வேறு வழியின்றி இறைச்சி கடைக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், நுண்ணுயிர் நொதித்தல் முறையானது மிகவும் எளிது. இவ்வளவு செலவு இல்லை. மாடு தரும் பாலில் இருக்கும் அதே புரதங்களுடன் பால் தயாரிக்க முடியும். ஆனால் மாட்டுக்கு பதில், நொதியை (Yeast) பயன்படுத்தி, அதுவும் வெறும் சில நாட்களிலேயே.
நொதியைப் பயன்படுத்தி வெதுப்பகங்களில் எப்படி ரொட்டி, கேக் போன்றவை தயாரிக்கப்படுகிறதோ, மது ஆலையில் எப்படி மது தயாரிக்கப்படுகிறதோ, அதே போல் பாலும் தயாரிக்கப்படுகிறது.
உணவு விஞ்ஞானிகள் நொதி (ஈஸ்ட்) மீது மரபணு கோட்பாட்டை நிரலாக்கம் செய்து திணிக்கிறார்கள். அதனால், பால் உருவாகத் தேவையான புரதங்களை மட்டுமே நொதி வெளியேற்றுகிறது. இறுதியாக கிடைக்கும் பொருளான பாலில் நொதி சேர்வதில்லை. அதனால், இம்முறை மூலம் பெறப்படும் பால் மரபணு மாற்றப்பட்ட வகையிலும் சேர்வதில்லை.
பயன்கள் என்ன?
மேலும், இந்த பாலில் ஹார்மோன்கள், உயிர் எதிரி (ஆண்டிபயாடிக்குகள்), ஊக்க மருந்துகள் (ஸ்டெராய்டுகள்) மற்றும் கொழுப்புகளும் இல்லை. அதனால், நாம் அச்சமின்றி இந்த பாலை அருந்தலாம். புதிதாக நோய் வரும் வாய்ப்பில்லை எனினும், அதை காலம் தான் சொல்லவேண்டும்.
எப்போது வரும்?
இவ்வகை பாலை இந்த வருடமே விற்பனைக்கு கொண்டு வருவதில் இந்நிறுவனம் முனைப்பில் உள்ளது. பல உணவு மற்றும் பால் விற்பனை நிறுவனங்கள் இந்த பாலை விரும்பி இந்நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
இழப்பு யாருக்கு ?
இந்த பால் பரவலாக பயன்பாட்டிற்கு வந்தால், அது நிச்சயம் பால் உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும், விவசாயத்தையும் நேரடியாக பாதிக்கும்.
இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, நொதியின் மரபணு மாற்றப்படுமேயானால், பிற்காலத்தில், அதில் நோய் உற்பத்தி செய்யும் வகையில் கிருமிகளையும் கூட சேர்த்து பால் தயாரிக்க முடியும் என்பது எனது கருத்து.
இது பரவலான நடைமுறைக்கு வந்தால், முதலில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பால் உற்பத்தி எனும் பேரில் செய்யும் கொடுமை பெருமளவில் குறையும். அதனால், கால்நடைகளையே யாரும் வளர்க்க விரும்ப மாட்டார்கள். அப்படியே வளர்த்தாலும் அது இறைச்சிக்காகத் தான் இருக்கும்.
நன்மை யாருக்கு?
இது பரவலான நடைமுறைக்கு வந்தால், முதலில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பால் உற்பத்தி எனும் பேரில் செய்யும் கொடுமை பெருமளவில் குறையும். ஆடு, மாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டே, தங்களது குட்டிகளுக்கு, கன்றுகளுக்கு பால் கொடுக்கும். பூமிக்கு நல்லது என்றும் இந்நிறுவனம் கூறுகிறது. பெரு நிறுவனங்கள் பால் உற்பத்தியை முற்றிலும் வர்த்தகமாக செய்வதால் அவர்களுக்கே நன்மை. இந்நிறுவனம் கூறுவது போல் வெறும் நன்மை மட்டுமே பயக்கின், பால் மூலம் கலப்படத்தால் உருவாக்கப்படும் நோய்களின்றி மக்கள் நிம்மதியுடன் வாழ்வாங்கு வாழ்வர்.