ஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீன்பிடி குழுக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால் பல விஞ்ஞானிகள் இது ஏற்படுத்தும் ஆபத்து குறைவாக இருப்பதாக கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அரசு தெரிவிக்கிறது.
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விட என்ன காரணம்?
ஜப்பான் நாட்டை 2011 ஆம் ஆண்டில் தாக்கிய சுனாமியால் டாய்ச்சி அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட அணு மின் நிலையத்தை குளிர்விக்கப் பயன்படுத்திய கதிரியக்க நீரை பாதுகாப்பாக சேகரித்து வைத்து வந்தனர். இதனை அப்புறப்படுத்துவது குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த மாத இறுதிக்குள், இறுதி முடிவு எட்டப்படும் என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
தினந்தோறும் 170 டன் கதிரியக்க தண்ணீர்
கடந்த மாத நிலவரப்படி, 1.23 மில்லியன் டன் நீர் 1,044 தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணு உலை கழிவு நீரின் அளவு ஒரு நாளைக்கு 170 டன் அதிகரிக்கும். அணுசக்தி ஆலை தளத்தில் சேமிப்பு இடம் முடிந்துவிட்டதால், இந்த தண்ணீருக்கான தீர்வை தீர்மானிப்பதற்கான அழுத்தம் உருவாகிறது. டோக்கியோ எலக்ட்ரிக் பவர் (TEPCO) ஆலையின், அனைத்து தொட்டிகளும் 2022 கோடை காலத்திற்குள் நிரம்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
1,000 க்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நீரை விடுவிப்பதற்கான பணிகள் 2022 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் தொடங்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சர்வதேச அணுசக்தி நிறுவனம், இந்த நீரை கடலில் வெளியேற்றுவதற்கு முன்பு ஆலைக்குள் நீர்த்துப் போக செய்ய முடியும் என்கிறது. இதன் மூலம் 40 மடங்கு தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் ஜப்பானில் வெளிவரும் Yomiuri Shimbun நாளிதழ் கூறுகிறது. இது முழுவதும் முடிவடைய 30 ஆண்டுகள் ஆகும் என்றும் அது விவரிக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் புகுஷிமா அணு உலை -1 -ல் நிறைய கலன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் காட்சி | Groups of tanks containing treated water are seen at the Fukushima No. 1 nuclear power plant in this aerial photo taken in February.
TEPCO-வின் மேம்பட்ட திரவ செயலாக்க அமைப்பு (Advanced Liquid Processing System) நீரிலிருந்து பெரும்பாலான கதிரியக்கப் பொருள்களை நீக்கிவிடுகின்றது. ஆனால் இந்த அமைப்பால் டிரிட்டியம் என்ற கதிரியக்க ஐசோடோப்பை மட்டும் வடிகட்ட முடியவில்லை. இது ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு ஆகும். அணு மின் நிலையங்கள் வெளியிடும் இந்த நீர் வழக்கமாக கடல் நீரில் கலக்கின்றன.
என்னென்ன பாதிப்புகள்?
ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பான டிரிட்டியம் மனிதர்களுக்கு மிகப் பெரிய அளவுகளில் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே நேரத்தில் சர்வதேச அணுசக்தி நிறுவனம், வடிகட்டிய கழிவு நீரை கடலில் விடுவதற்கு முன்பு கடல் நீரில் நீர்த்துப்போகச் செய்ய முடியும் என்று கூறுகிறது.
புகுஷிமா ஆலை உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும், மீனவர்களிடையே உள்ள கவலைகளை நிவர்த்தி செய்வதாகவும், தண்ணீர் வெளியானதும் நுகர்வோர் சில காலம் தாங்கள் கடல் உணவைத் தவிர்ப்பார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் குழுக்கள் நீண்ட காலமாக தண்ணீரை கடலுக்குள் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீன்பிடி குழுக்கள் இதற்கு எதிராக வாதிட்டன. நுகர்வோர் இப்பகுதியில் இருந்து பொருட்களை வாங்க மறுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் சில விஞ்ஞானிகள் பசிபிக் பெருங்கடலின் பரந்த அளவில் நீர் விரைவாக நீர்த்துப் போகும் என்றும், டிரிட்டியம் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு குறைந்த ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார்கள்.