ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் தளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி – சி 42 (PSLV-C42) என்ற ஏவுகணை, செப்டம்பர் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான கவுன்டவுன் இன்று பிற்பகல் தொடங்க உள்ளது.
பி.எஸ்.எல்.வி – சி42 என்ற ஏவுகணை மூலமாக இங்கிலாந்து நாட்டின் நோவா எஸ்எஆர் (NovaSAR) மற்றும் எஸ்1-4 ( S1-4) என்ற இரண்டு செயற்கைக் கோள்களும் நாளை விண்ணில் பாய இருக்கின்றன. இது தரையிலிருந்து சுமார் 583 கி.மீ தொலைவில் சூரிய ஒளியின் சுற்றுப்பாதையிலிருந்து இதன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
445 கிலோ எடை கொண்ட நோவாஎஸ்எஆர் (NovaSAR) செயற்கைக்கோள் பூமியில் நிகழும் இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம், நிலத்தின் பயன்பாடுகள், பனி மூட்டங்கள் மற்றும் காடுகளின் வரைபடங்கள் ஆகியவற்றைப் படம் எடுத்து பூமிக்கு அனுப்பும்.
அது மட்டுமல்லாமல் 444 கிலோ எடையுடன் கூடிய, பூமியின் அதிக ஒளித் தீர்மானம் கொண்ட(Optical Earth Observation Satellite) எஸ்1-4 என்ற செயற்கைக்கோளின் மூலமாக வளங்களின் ஆய்வு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகர நிர்வாகம், பேரழிவு கண்காணிப்பு போன்றவைகளின் செயல்களை அறிந்திடலாம்.