கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் மரபியல் கூறுகளில் மாற்றம் அடைந்து உருமாற்றம் பெறுவது இயல்பான ஒன்றுதான் என்கிறது மருத்துவ உலகம்.
ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறுபுறம் கொரோனா குறித்த வதந்திகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
என்ன அது உருமாறிய கொரோனா?
SARS-COV-2 வைரஸின் புதிய மாறுபாடு “VUI – 202012/01” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இது ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸை விட மிகவும் தீவிரமான வைரஸாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று RNA வைரஸ், மற்றொன்று DNA வைரஸ். கடந்த வருடம் டிசம்பரில் பரவத் தொடங்கி, இப்போது வரை தொற்றை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் முதல் கொரோனா வைரஸ் RNA வகையைச் சார்ந்தது. இந்த வகையைச் சேர்ந்த வைரஸ்களின் குட்டிகள் தங்கள் தாயைப்போல் இல்லாமல் மரபுரீதியில் சிறிதளவு மாறுபடும். இந்த மாற்றங்கள் ‘பிறழ்வு (Mutation)’ எனப்படும். நாள்கள் செல்லச்செல்ல இந்த வைரஸ் பலவாகப் பெருகி லட்சக்கணக்கில் வைரஸ்களை உருவாக்கும். அப்படி புதிதாக உருவாகின்ற வைரஸ்கள், தன் தாய் வைரஸிடமிருந்து அதிக அளவில் வேறுபட்டிருக்கும். இதை ‘மாறுபாடு (Variation)’ எனலாம். முதல் கொரோனா வைரஸானது உருவம், மரபணு மூலக்கூறு ரீதியில் 17-21 மாற்றங்கள் அடைந்து தற்போது புது மூலக்கூறுகளைக் கொண்ட வைரஸாக உருமாறி தற்போது பரவி வருகின்றது.

எங்கிருந்து வந்தது?
செப்டம்பர் 21 ஆம் தேதி, இது இங்கிலாந்தின் கென்ட் நகரத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. நவம்பர் மாதத்தில் பரவத் தொடங்கியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலும் இது பரவி உள்ளது.
அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், வாசனை நுகரும் திறன் குறைவு மற்றும் சுவை இழப்பு என ஏற்கெனவே இருக்கும் கொரோனாவின் வழக்கமான அறிகுறிகளோடு மேலும் 7 புதிய அறிகுறிகளை கொண்டுள்ளது இந்த புதிய உருமாறிய வைரஸ் தொற்று.
அதீத சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு போன்றவை புதிய வைரஸின் அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இது இன்னும் எளிதாக பரவுகிறதா?
(சி.எம்.எம்.ஐ.டி) நடத்திய ஆய்வின்படி, முதலில் இருந்த கொரோனா வைரஸ்ஸை விட இந்த உருமாறிய வைரஸ் 50% முதல் 74% வரை வேகமாக பரவக்கூடியது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், பழைய வைரஸ் போல இல்லாமல் 40 வயதுடையவர்களையும் இது வேகமாகவும் வலுவாகவும் தாக்கி வருவதாக இருக்கிறது.
உருமாறிய கொரோனா கொடியதா?
வலிமையானதாக உள்ளது. இது மிகவும் எளிதாக வேகமாக பரவும் பட்சத்தில், அதிகமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமாகிவிட்டால், நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்பின் தரம் குறையும். இது எதிர்பார்த்ததை விட அதிகமான இறப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் இதன் பரவல்?
இங்கிலாந்தில் பரவி வந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம் அந்தந்த நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.
அவ்வகையில் இந்தியாவிலும் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுக்கு சோதனை செய்ததில் சிலருக்கு உருமாறிய புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு எளிதாக பரவுமா?
இது குழந்தைகளுக்கு பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான நீல் பெர்குசன் தெரிவித்தார்.
புதிய வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுமா?
புதிதாக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் புதிதாக உருமாறிய கொரோனாவிற்கு எதிராக செயல்படும் என்று பெரும்பாலான நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதிய உருமாறிய கொரோனாவின் புரதம், முந்தைய கொரோனாவுடன் 99% ஒத்துப்போவதால் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகள் அவற்றை எதிர்த்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று பயோன்டெக் தலைமை நிர்வாக அதிகாரி உகுர் ஷாஹின் (BioNTech CEO) கூறியுள்ளார்.