செயற்கை நிலவைத் தொடர்ந்து தற்போது செயற்கை சூரியனை உருவாக்கி அசத்தியிருக்கிறது சீனா. செயற்கை நிலவைத் தயாரித்தது மின்சார செலவுகளை மிச்சம் பிடிக்க… செயற்கை சூரியனை எதற்காக உருவாக்கியிருக்கிறார்கள் தெரியுமா?

செயற்கை சூரியன்
சீனாவின் ஹெபெய் எனும் இயற்பியல் ஆய்வு நிறுவனம் (Hefei Institutes of Physical Science), செயற்கை சூரியனை உருவாக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது. Experimental Advanced Superconducting Tokamak (EAST) reactor எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கை சூரியன், 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் (180 மில்லியன் டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் கொண்டது.
உண்மையான சூரியன் வெறும் 27 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்டது தான். அதாவது, இந்த செயற்கை சூரியன், உண்மையான சூரியனை விட 6 மடங்கு வெப்பமானது.
அணுக்கரு இணைவு
இயற்கையாக சூரியன் தனது வெப்பத்தைப் பயன்படுத்தி அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்குகிறது. அதே ஆற்றலை செயற்கையாக பூமியில் உருவாக்கத் தான் இந்த 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப ஏற்பாடு. உலகின் மிகச் சிறந்த அணுக்கரு இணைப்பு பரிசோதனைக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் தான் செயற்கை சூரியன் என்பதாகும்.

ஆற்றலை உருவாக்க நமது சூரியன் பயன்படுத்தும் அதே செயல்பாட்டை உருவாக்க ஆய்வாளர்கள் இந்த அணுக்கரு உலையை உருவாக்கியுள்ளனர். இந்த அணுக்கரு உலை, அணுக்கருப் பிளப்பின் போது வெளியாகும் வெப்பத்தை தாங்கும் விதத்திலான சுவர்களைக் கொண்டுள்ளது.
செயற்கை ஆற்றல்
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்தால், அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. அணுக்கரு இணைவு என்றழைக்கப்படும் அந்த செயல்முறை மூலமாகத் தான் சூரியன் ஒளி மற்றும் வெப்ப ஆற்றல்களை உருவாக்குகிறது. அந்த ஆற்றல்களை செயற்கையாக பூமியில் உருவாக்குதல் என்பது ஆய்வாளர்களின் பெருங்கனவாகும்.
அந்தக் கனவை நனவாக்கத் தான் செயற்கை சூரியன் உதவும். அது நிலையான பிளாஸ்மாவைக் கட்டுப்படுத்த காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் சாதனமாகவும் இருக்கிறது. அதன் மூலம் நிலையான அணுக்கரு இணைவு என்பது சாத்தியப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.