இரவு நேரங்களில் தூக்கமில்லையா? தூக்கம் வந்தாலும் திகில் கனவுகள் வருகின்றனவா? நீங்கள் மட்டுமல்ல… உலகம் முழுவதும் பலரும் இதைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட லாக்டௌன், சிலரது கனவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏராளமான சமூக ஊடக பயனர்கள் தாங்கள் கண்ட கனவுகள் பற்றி பதிவிட்டு வருகின்றனர். துளியும் தொடர்பே இல்லாத திகில் கனவுகள் வருவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இது போன்ற கனவுகள் வரக் காரணம் என்ன? உங்கள் தூக்கத்தை மிகவும் அமைதியானதாக மாற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்….
கொரோனா அச்சத்தால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து வரும் நிலையில், பலரும் வினோதமான மற்றும் மறக்க முடியாத கனவுகளைக் கண்டதாக சமூக ஊடகங்களில் கூறியுள்ளனர். கடந்த காலங்களில் வந்த கனவுகள் தூங்கி எழுந்ததும் மறந்து போயின என்றும், ஆனால் இப்போது பொது முடக்க காலத்தில் காணும் கனவுகளை நினைவு கூற முடிவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மனித மூளையானது நீண்டகால நினைவுகளை அசைபோட தூக்கத்தைப் பயன்படுத்துகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதி தான் கனவுகள்.
Also Read: நன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா?
ஹார்வர்ட் மருத்துவ கல்லூரி, சமீபத்தில் கனவு தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி இருந்தது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் வேளையில் தெளிவான, நினைவில் நிற்கும் கனவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இது புதிதல்ல என்றும், அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போதும் இது போன்ற கனவுகளை மக்கள் கண்டதாகவும் அக்கல்லூரி உதவி பேராசிரியர் கூறியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி, பல மில்லியன் மக்களுக்கு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பகலில் அதிகரித்த பதட்டம், அதிக எதிர்மறையான கனவுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. பலர் நண்பர்களைப் பார்ப்பது போலவும், பறவைகள் அல்லது விலங்குகள் தங்களைத் தாக்கியது போலவும், தாங்கள் கொல்லப்பட்டது போலவும் கனவு வருவதாக கூறினர். சிலர் திகிலூட்டும், அதிசயமான நிகழ்வுகளையும் கண்டதாக கூறினர். இது போன்ற கனவுகளை நீங்களும் கண்டிருக்கக்கூடும். இது கொரோனாவைரஸ் ஏற்படுத்தும் உளவியல் தாக்குதல் ஆகும்.
நாம் தூங்குவதில் 4 நிலைகள் உள்ளன. N1, N2, N3 மற்றும் REM Sleep. அதிகாலை மூன்று மணிக்கு மேல் வரும் Rapid Eye Movement என்ற நான்காம் நிலை தூக்கம், சுருக்கமாக REM Sleep எனப்படுகிறது. இந்த நிலையில், நமது கண்கள் மூடியிருந்தாலும் நமது கண் அங்குமிங்கும் விரைவாக இயங்குகிறது. இந்த தூக்க நிலை, நமது உடல்நலனுக்கு முக்கியமானது. REM Sleep நிலையில் காணும் கனவுகள் மிகவும் தெளிவாக இருக்கும். இந்த கனவுகள் மட்டுமே நமக்கு நினைவில் இருக்கும்.
Also Read: இரவில் இனி இப்படி தூங்காதீங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை!
REM Sleep நிலையின் போது Pons எனப்படும் மூளைப்பாலமானது முதுகுத் தண்டுக்கு மற்றும் பிற உறுப்புகளுக்கு அனுப்பும் சிக்னல்களை தற்காலிகமாக நிறுத்தி விடுகிறது. இதனால்தான் கனவுகளின் போது நாம் கண்ட கனவுகளுக்கு செயலாற்றுவது இல்லை. எடுத்துக்காட்டாக, யாரேனும் துரத்துவது போல் கனவு கண்டால் தூக்கத்தில் இருக்கும் நாம் எழுந்து ஓடுவதில்லை.
அனைத்து தூக்க நிலைகளிலும் கனவுகள் தோன்றும். ஆனால் REM தூக்கம் தான் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் கொண்ட கனவுகளுக்கு காரணம். ஒரே இரவில் 7 கனவுகள் கூட வரும். சராசரியாக தினந்தோறும் 5 கனவுகள் காண்பவர்களே அதிகம் உள்ளனர். ஒவ்வொரு நிலையம் 90 முதல் 110 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
REM Sleep நிலையின் போது கனவு கண்டு விழிப்பவர்களுக்கு தூக்கம் குறித்த பெரும்பாலான விவரங்கள் நினைவிலேயே இருக்கும்.
கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும், கடவுளைப் போன்றே அறிவியலால் புரிந்து கொள்ள முடியாதவை கனவுகள். நமது அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் நம் கனவுகளுக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.
மிகவும் எளிது… கொரோனா போன்று எதிர்மறை செய்திகளை சில நாட்கள் தவிர்த்து … மகிழ்ச்சி தரும் வேறு செயல்களில் மனதை செலுத்துங்கள்… நல்ல இசையை கேளுங்கள்! மனம் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.