இந்த மாதிரியான சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்கலாம். பொது இடத்திற்குச் செல்கிறீர்கள். புதிய மனிதர்கள், புது இடம், புதிய சூழலைக் கண்டு சிலர் பயப்படுவர். இது சாதாரண தயக்கம் அல்ல, சமூகத்தைப் பார்த்து பயப்படும் இது ஒருவகையான மனநோய் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனை ஆங்கிலத்தில் social phobia அல்லது social anxiety disorder என்று குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து ஆய்வு செய்த அமெரிக்க மனநல கூட்டமைப்பு (American Psychiatric Association) பொது இடங்களில் உதாரணமாக பொதுக்கழிப்பறையை பயன்படுத்தும்போதும், புதிய மனிதர்களுடன் பேசும்போதும் இவர்களுக்கு அதிக பயம் ஏற்படுகிறதாம். இந்த பயம் அவர்களுடைய அன்றாட செயல்பாடுகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் தேசிய மனநல ஆராய்ச்சியகம் நடத்திய கருத்துக்கணிப்பில் 10,000 இளைஞர்கள் கலந்துகொண்டனர். அவற்றுள் 12 சதவிகித பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அறிகுறிகள்
மருத்துவர்கள் இந்த பாதிப்பிற்கான அறிகுறிகள் எனக் குறிப்பிடுவது இதைத்தான்.
- சமூக கட்டமைப்புகள் மீது கோபம் வருதல்.
- தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் அதிகமாக இருக்கும்.
- தான் எங்கு இருந்தாலும் எல்லோரும் தன்னையே கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.
- பல மாதங்களுக்கு முன்னால் நடந்தவற்றை யோசித்து யார்மீதாவது கோபம் கொள்ளுதல்
- எங்கே நாம் முட்டாளாக்கப்பட்டு விடுவோமோ? என்னும் அச்சம்.

மனதளவில் மட்டுமல்லாமல் இவை உடலளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவை
- பதட்டம்
- வியர்த்துக்கொட்டுதல்
- முகம் சிவந்துபோதல்
- கைகால் நடுக்கம்
- சிலருக்கு வயிற்றுப் பிரச்சினைகள் கூட வரலாம்.
காரணம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலைகழகத்தில் மனநல மருத்துவராக இருக்கும் ஷெரில் கார்மின் (Cheryl Carmin) இம்மாதிரியான பாதிப்புக்கு குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதில்லை, மூளையில் உள்ள தகவல் பரிமாற்றம் சரிவர நடக்காமல் போகும் பட்சத்திலும் இந்த சிக்கல் வரலாம், குறிப்பாக serotonin அளவு இந்த பாதிப்பின்மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிறுவயது குழந்தைகள் பதட்டப்படும் விஷயங்களில் பெற்றோர் அதிக கோபம் காட்டுவது, அதைப்பற்றியே கேள்வி கேட்பதும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.
10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள். இந்த சிக்கல் விடலைப்பருவத்தின்போது மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரத்தினை செலவிட வேண்டும் என்கிறார் கார்மின். இந்த பாதிப்பு உள்ளவர்களில் 20% பேர் குடி மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் ஒரு ஆய்வு விளக்குகிறது.
தீர்வு
மன அழுத்தத்தைக் குறைக்கும் selective serotonin reuptake inhibitors முறையை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கிறார்கள். மேலும் Cognitive behavior therapy எனப்படும் மனித சிந்தனை மற்றும் முடிவுகளை அறிந்துகொள்ளும் சிகிச்சையின் மூலம் பயத்தினைக் குறைக்கலாம்.
மனநல மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் தியானம், பயணம் போன்றவைகளை மேற்கொள்வதும் சிறப்பான பயன்களைத் தரவல்லது.