கோபம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் சாதாரணமாக இருக்கும் ஒரு உணர்வு. சில வேளைகளில் கோபம் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விபத்துகள், சண்டைகள், கொலைகள் போன்ற மனித வாழ்விற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களாக அது உருவெடுக்கிறது.
ஒரு மனிதன் கோபத்தில் எடுக்கும் முடிவு எப்போதும் சரியாக இருப்பதில்லை. கோபம் பல வகையில் மனிதனைத் தவறான நபராக சித்தரிக்கச் செய்கிறது. ஒருமுறை பொதுவெளியில் நீங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால், அதன்பின் நீங்கள் எதைச் செய்தாலும், கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்படுவீர்கள். அதுவும், தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் உங்களைப் பற்றித் தவறாக சித்தரிக்க அதிகம் காலம் தேவைப்படாது.

கோபத்தைத் தூண்டும் காரணிகள் என்ன?
கோபம் என்பது ஒரு உணர்வு என்று துவக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். இந்த கோபம் தோன்றப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் உறவுகள், பொறாமை, உணவு முறைகள், காலநிலை, உடல்நிலை போன்ற பலவற்றைக் கூறலாம். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக எரிச்சல் (Irritation) தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு செயல் நடந்தால், அதன் மூலம் உங்கள் மனதில் தோன்றும் எரிச்சல் கோபமாக வெளிப்படுகிறது.
ஒவ்வொரு காரணங்களும் எப்படி உங்களுக்குள் கோபத்தைத் தூண்டுகிறது?
உறவுகளால் தூண்டப்படும் கோபம்
குடும்ப உறுப்பினர்கள், சக பணியாளர்கள், நண்பர்கள் உங்களை மீறிச் செயல்படுகையில் உங்களிலிருக்கும் கோபம் வெளியில் வருகிறது. அதுவும், நீங்கள் நேசிக்கும் நபர் உங்களை மீறிச் செயல்படும்போது கடும் கோபம் ஏற்படும்.
ஒவ்வொருவரும் வெறுக்கும் (விரும்பாத செயல்) விஷயம் நிச்சயம் வேறுபடுகிறது. அவ்வாறு இருக்கையில், மற்றவர்கள் வெறுக்கும் விஷயம் நமக்கு ஏளனமாகத் தெரியும். எனவே நாம் அவரை பார்த்து, “இதற்கெல்லாம் கோபம் வரலாமா?” என்று கேட்கும் கேள்வி அவரை கோபமடைய செய்யும். இது உறவுகளில் பெரும்பாலும் நடைபெறும். உங்கள் நண்பர்களிடையே இந்த கேள்வியால் சண்டையும் ஏற்பட்டிருக்கும்.

நாம் நெருங்கிய உறவுகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதே இதற்குக் காரணம். அவ்வேளையில், அவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையோ? என்ற கேள்வி மனதில் தோன்றுகிறது. அது கோபமாக வெளிப்படுகிறது.
அதேபோல் தான் பணி செய்யும் இடங்களில் நீங்கள் நம்பும் ஒருவர், அல்லது உங்களுக்குக் கீழ் பணி செய்யும் நபர் ஒருவர், உங்களை மீறிச் செயல்படும் போது, அவர் சரியாகப் பணி செய்யவில்லை என்று கோபத்தை வெளிப்படுத்துகிறீர்கள். ஒருவேளை அவர், தனிப்பட்ட விஷயங்களில் கூட, உங்களை மீறிச் செயல்படும் போது, “எனக்குக் கீழ் பணி செய்யும் நபர் எப்படி என்னை மதிக்காமல் இருக்கலாம்?” என்று உங்களுக்குள் எண்ணம் தோன்றும். அது எரிச்சலடைய வைத்துக் கோபப்படச் செய்கிறது.
பொறாமையால் உருவாகும் கோபம்
உறவுகளால் ஏற்படும் கோபத்தைப் போன்று பொறாமையால் ஏற்படும் கோபத்தையும் நீங்கள் அதிகம் சந்தித்திருக்கலாம். பெரும்பாலும், வீடுகளில் பொறாமையால் ஏற்படும் கோபம் இருக்கும். பெற்றோர், சகோதரன் அல்லது சகோதரி மீது மட்டும் அதிகம் அக்கரை காட்டுகின்றனர் என்ற எண்ணம் பொறாமையைத் தூண்டும். அது நாளடைவில் கோபமாக மாறுகிறது. இது பல குடும்பங்களில் சகோதரர்களை, வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க செய்கிறது.
அதேபோல் கணவன், மனைவி மீது அதீத காதல் கொண்டிருக்கையில், கணவனின் பெற்றோருக்கு மகன் தங்கள் மீது பாசம் காட்டுவதைக் குறைப்பதாகத் தோன்றும். அது பொறாமையாக மாறி இறுதியில் மாமியார் மருமகள் சண்டையாக உருவெடுக்கிறது. அதேபோல், தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று மருமகள்கள் கணவனின் பெற்றோரிடம் கோபமடைகின்றனர்.
அலுவலகத்தில், உங்களை விட ஒருவர் அதிகமான சம்பளம் பெற்றாலோ அல்லது வாழ்த்துக்கள் பெற்றாலோ நிச்சயம் பொறாமை தோன்றும். அதை நீங்கள் வாழ்த்துகள் பெற்ற நபரிடம், கோபமாக ஒரு முறையாவது வெளிப்படுத்தியிருப்பீர்கள், அல்லது அவரை பற்றி ஒரு தவறான கருத்தையாவது மற்றவரிடம் பகிர்ந்திருப்பீர்கள்.
இதுபோன்ற சூழல் வகுப்பறையில், வியாபாரங்களில், பயணங்களில் என்று பல இடங்களில் நிச்சயம் நாம் கடந்து வந்திருப்போம்.
காலநிலை
இதை நீங்கள் பெரும்பாலும் உணர்ந்திருப்பீர்கள். வெயில் காலங்களில், நீங்கள் வெளியில் செல்கையில் அதிக அளவு வியர்வை வெளியேறும். அந்த சூழல் உங்களை எரிச்சலுடைய செய்யும். அதேபோல், சிலருக்குக் குளிர்காலம், சிலருக்கு மழைக்காலம் என்று காலநிலைகள் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் கோபம் உருவாகும். அந்த கோபத்தை நீங்கள் சாலையில் யார் மீதாவது வெளிப்படுத்தியிருப்பீர்கள் அல்லது மனதில் திட்டிவிட்டுக் கடந்து வந்திருப்பீர்கள்.
உணவுகளால் உணர்வுகளைத் தூண்ட முடியும். பாலியல் உணர்வுக்காக சில உணவுகளை எடுத்துக்கொள்ளவும், சிலவற்றைத் தவிர்க்கவும், வேடிக்கையாகப் பேச்சில் குறிப்பிடுவதைக் கேட்டிருப்போம். இந்த ஒரு உணர்வுக்கு மட்டுமே உணவுகள் காரணம் என்று நாம் நம்பியிருப்போம்.

ஆனால், கோபத்திற்கும் சில உணவுகள் காரணமாக அமைகின்றது. சீன மருத்துவர்கள் பரிந்துரைப்படி கோபத்தைக் கட்டுப்படுத்த உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதில், தக்காளி ஒரு முக்கிய உணவாக உள்ளது. அதேபோல் கத்திரிக்காய், காலிபிளவர், புரோக்கோலி, பர்கர் (burger), சிப்ஸ், உலர்ந்த பழங்கள், பாஸ்தா வகைகள், ஐஸ்கிரீம் போன்றவை உங்களுக்குக் கோபத்தைத் தூண்டச் செய்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் வெங்காயம், பூண்டு இரண்டும் கோபத்தை அதிகம் தூண்டுகிறது. எனவே இதை ஆன்மிக பாதையைத் தெரிவு செய்யும் நபர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.
நோய்களால் ஏற்படும் கோபம்
நோய்களால், உங்களுக்குக் கோபத்தைத் தூண்ட முடியும். காரணம் நோய்கள், உடலைப் பலவீனப்படுத்தி மனதைச் சோர்வடையச் செய்யும். அப்போது உருவாகும் கவலை உங்களை அதிகமாகக் கோபமடையச் செய்கிறது.
பொதுவாகப் படுக்கையில் இருக்கும் நபர் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று அழுவது, உடன் இருந்து பார்த்துக்கொள்பவரிடம் கோபப்படுவது போன்ற செயல்களை நம்மில் பலரும் கவனித்திருப்போம்.
அதேபோல், நோய்க்குப் பயன்படுத்தும் குறிப்பிட்ட மருந்துகள் கூட கோபத்தைத் தூண்டச் செய்கிறது. இதை மருத்துவர்களே பலமுறை எச்சரிக்கின்றனர்.

கோபத்தை கட்டுப்படுத்தும் சில எளிய முறைகள்
- கோபம் ஏற்படுகையில், நூறிலிருந்து தலைகீழாக எண்ணுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்
- திடீரென்று ஏற்படும் கோபத்தைக் கட்டுப்படுத்த மூச்சை நன்கு இழுத்து மெதுவாக வெளியில் விடவும்.
- கோபம் ஏற்படும் போது ஒரு சிறிய நடைபோட்டு வாருங்கள்.
- உங்கள் தசைகளைத் தளர்வுப் படுத்தவும்.
- உடலை வளைத்து நெளிக்கவும் (இது பொதுவெளியில் நன்றாக இருக்காது)
- அமைதியான அறையில் தனித்து இருங்கள்
- விருப்பமான இசையைக் கேளுங்கள்
- கோபம் வருகையில் பேசுவதை நிறுத்துங்கள்.
- கோபம் ஏற்படுகையில், நீங்கள் செய்யும் வேலைகளுக்கு ஓய்வு கொடுங்கள்
- உங்கள் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட செயல்களைச் செய்யுங்கள்.
- வாய்விட்டுச் சிரிக்கவும்.
- மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தும், சராசரியாக கோபத்தால் பாதிக்கப்படும் மனிதர்களுக்குள் தோன்றும் காரணமும், அதற்கான சில தீர்வுகளுமே. இதையும் தாண்டி பணிச்சுமை, ஏமாற்றம், போன்ற பல காரணங்களால் கோபம் ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க, இங்கு குறிப்பிட்டுள்ள தீர்வுகளைப் பயிற்சி செய்து பார்க்கலாம். ஆனால், அது முழு தீர்வாக இருக்கும் என்று நம்ப முடியாது.