தங்களது முன்னேற்றத்தில் முழு அக்கறை கொண்டோர் மட்டுமே இது போன்ற பதிவுகளை படிப்பார்கள். அதனால், உங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!
நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலே அதிகாலையில் கண் விழிப்பது தான். கண் விழித்து விட்டால் எந்த சவால்களையும் சந்திக்கலாம். ஆனால், அதற்கு முதலில் நாம் எழுந்திரிக்க வேண்டுமே. மாணவர்கள் தொடங்கி பணிக்கு செல்பவர்கள் வரைக்கும் அனைவருக்குமே இந்தப் பிரச்சனை இருக்கிறது.
அதிகாலை சீக்கிரம் எழுவதற்கு சில எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் காணலாம்.
1. மிதமான அளவு இரவு உணவு உண்ணுங்கள்!
சத்தான உணவை உட்கொள்வது உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் நன்றாக தூங்க உதவுகிறது. மறுபுறம், பொதுவாக உடல்நலத்திற்கு கேடு தரும் என கருதப்படும் உணவுகள் (Junk Foods) உங்களை மந்தமாக உணரவும், உங்கள் ஆற்றலை மட்டுப்படுத்தவும் செய்யும்.
எப்போதுமே இரவு உறங்கச் செல்வதற்கு முன் அதிகளவு உணவு உண்பதைத் தவிருங்கள். வயிறு நிறைய (ஆரோக்கிய உணவாக இருந்தாலும்) உணவு உண்பதால் மறுநாள் விழிக்கும் போது மிகவும் சோம்பலாக உணர்வீர்கள். அதே நேரம், மிகவும் குறைந்த அளவு உணவை உட்கொள்வதால் நடு இரவில் பசி எடுக்கும் நிலை உண்டாகலாம். மிதமான அளவு உணவை உட்கொள்வதால் தூக்கம் தடைபடாமல் தூங்க முடிகிறது. இதனால் காலையில் சுறுசுறுப்புடன் எழுந்துவிட முடியும்.

2. மின்னணு கேட்ஜெட்களை நிறுத்தி வைப்பது
விரைவாக எழுந்திருப்பதற்கான உங்கள் முயற்சிகளை உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் கெடுத்துக் கொண்டிருப்பீர்கள். தூங்கும் முன்பு காஃபி குடிப்பதும், படுக்கைக்கு முன் நீல ஒளியை (Blue light) வெளியிடும் சாதனங்களை (Mobile Phones, Laptops, TV) பயன்படுத்துவதும் நீங்கள் விரைவாக தூங்குவதை நிச்சயம் தடுக்கும். பலருக்கு கண்கள் சிவப்பாகும். மின்னணு சாதனங்களை உறங்கும் நேரத்தில் கையாளுவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விரைவாக தூங்கவில்லையெனில் விரைவாக எப்படி எழ முடியும்?
Also Read: இரவில் விளக்கணைத்த பின் கைபேசி உபயோகிப்போர் கவனத்திற்கு..!!
3. தூங்கும் முன்னர் தண்ணீர் குடிப்பது
இரவில் உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவதை பழக்கமாக்குங்கள்.தொடர்ந்து தினமும் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகம் செயல்பாடு நன்றாக இருக்கும். மேலும், மறுநாள் காலையில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதனால் விழிப்பு உண்டாகும்.
அதே நேரம், அதிக அளவு தண்ணீர் குடித்தால், சிறுநீர் கழிக்கும் உணர்வு முன்னதாகவே தோன்றி தூக்கம் தடைபடக்கூடும். சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதனைத் தவிர்த்து விடலாம்.
4. படுக்கைக்கு அருகில் அலாரம் வைக்காமல் தள்ளி வைப்பது
பலரும் படுக்கையில் அல்லது படுக்கைக்கு அருகில் அலாரத்தை வைக்கிறோம். அலாரம் அடிக்கும் போது, கைக்கெட்டும் தொலைவில் இருப்பதால் உடனே அதனை நிறுத்தி விட்டு மறுபடி தூக்கத்தைத் தொடர்கிறோம். ஆகவே, அலாரத்தைப் படுக்கையை விட்டுத் தொலைவாக வைத்துக்கொள்ளுங்கள். அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும். சில மணித்துளிகளில், அதனை நிறுத்த எழுந்து வர வேண்டியிருக்கும். இதனால் விழிப்பு ஏற்படும்.
Also Read: நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?
5. சூரிய ஒளியை பெறுவது
விழிப்பு வந்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து கொள்வது நல்லது. சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வருவது உங்கள் சர்க்காடியன் தாளங்களை சீராக்க உதவுகிறது. மேலும், உங்கள் தூக்கத்தை மேம்படுத்துகிறது. வெளிச்சம் தான் விடிந்துவிட்டது என்ற உணர்வை தருவது. நீங்கள் காலையில் சிறிது சூரிய ஒளியைப் பெற்றால், அது நாள் முழுவதும் உங்கள் மனநிலையையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவும். நீங்கள் எழுந்தவுடன் உங்கள் கண்களை மூடித்திறக்க முயற்சிக்கவும். பிறகு சிறிது நடைப்பயிற்சி செய்யவும்.
Also Read: நன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா?