ஆதார் எண் பாதுகாப்பானது அல்ல என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆதார் ஆணையத்தின் தலைவர் ஆர். எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, “என்னுடையஆதார் எண் இது தான். இதை வைத்துக் கொண்டு என்ன கெடுதல் செய்ய முடியும். எதாவது ஒரு விதத்தில் நிரூபிக்க முடியுமா..? என்று சவால் விடுத்து இருந்தார் .
இவருடைய இந்த சவாலை, பிரான்ஸ் நாட்டு இணையப் பாதுகாப்பு வல்லுநரான எலியட் அல்டர்சன் (Elliot Alderson) ஏற்றுக்கொண்டு, சர்மா குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், முகவரி மற்றும் பான் எண் ஆகியவற்றை வெளியிட்டு இருந்தார் அல்டர்சன். (இது குறித்த முழுமையான தகவலை இங்கே படிக்கவும்.)

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்ட் கைபேசிகளிலும் ஆதார் உதவி எண், UIDAI 180013001947 என்ற பெயரில் பதிவாகி உள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அவர் சொன்னபடியே, கைபேசியை சோதித்துப் பார்க்கும் போது, UIDAI எண் பதிவாகி உள்ளதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் ஆணையம், “தாங்கள் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தையோ ஆதார் உதவி எண்ணை சேமிக்கச் சொல்லி கேட்கவில்லை. அதற்கும் ஆணையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து இருந்தது.
பின்னர், கூகுள் தான் இந்த எண்ணை மொபைல்களில் தானாகவே பதிவு செய்து உள்ளது என ட்வீட் செய்து இருந்தார் எலியட்.
அதன் பின், இதற்கு பொறுப்பேற்று பதில் அளித்துள்ள கூகுள் நிறுவனம் இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு, கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில், 112 என்ற உதவி எண்ணைச் சேர்க்கும் போது, ஆதார் உதவி எண்ணையும சேர்ந்து விட்டதாகத் தெரிவித்து, அதற்கு வருத்தம் தெரிவித்து உள்ளது.
என்ன தான் நடக்கிறது ஆதாரைச் சுற்றி?