ரஃபேல் ரகசிய ஆவணங்கள் மாயம் – என்ன சொல்கிறது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம்!!

Date:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை மத்திய அரசின் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்த போர்விமான விற்பனையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டவே விஷயம் தீவிரமானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் போடப்பட்டது.

rafel
Credit: ED Times

கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானபோது  பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த ரகசிய ஆவணங்கள் திருடு போயிருப்பதாக வாக்குமூலம் அளித்தார். மேலும், அந்த ஆவணங்களைக் கொண்டே “தி இந்து” நாளிதழ் கட்டுரைகளை எழுதிவருவதாகவும் குற்றம் சாட்டினார். அன்று வெளிவந்திருந்த நாளிதழ் ஒன்றையும் சுட்டிக்காட்டினார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

என்ன சொல்கிறது இந்து?

மத்திய அரசு வழக்கறிஞரின் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்திருக்கும் இந்து நிறுவனத்தலைவர் என்.ராம், “தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி இது தவறில்லை எனவும், இம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்கனவே நடந்திருக்கிறது” என்றார். மேலும் நாங்கள் எந்த தகவலையும் திருடவில்லை, பணம் கொடுத்தான் வாங்கவில்லை என பதிலளித்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு ஆவணத்தை அரசின் அனுமதியின்றி வெளியிடலாமா? இதைத் தடுக்க சட்டமே இல்லையா? இருக்கிறது. அதுதான் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம். ஆனால் அதிலிருக்கும் குளறுபடிகள் தான் இங்கே இத்தனை சிக்கல்களை எழுப்பியிருக்கின்றன. அப்படி என்ன தான் இருக்கிறது அந்த சட்டத்தில்?

அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம்

1923 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியாவில் கொண்டுவரப்பட்டதுதான் இந்த அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம். இதன்படி நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கூடிய செய்திகளை பரப்புபவர்களுக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Official Secrets Act
Credit: scroll

சர்ச்சைக்குரிய செய்திகளைக் கொண்டிருக்கும் ஆவணங்கள், புகைப்படம், வரைபடம் ஆகிய எவற்றையும் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

சிக்கல்

இன்று வரை இந்த அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் எவ்வித மாற்றங்களையும் சந்திக்கவில்லை. ஆனால் 2006 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் இந்த சட்டத்தினை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தோடு இணைக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

Constitution_of_India
Credit: wikipedia

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரகசியம் என்று அறியப்படும் செய்திகளை வழங்கக்கூடாது என அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எனவே அரசாங்க ஊழியர்கள் யாரும் ரகசியம் சார் கேள்விகளைத் தொடுக்கும் விண்ணப்பதாரருக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாது. குழப்புகிறதா? தீர்த்துவிடலாம்.

அரசாங்க அதிகாரி ரகசியத் தகவல்களை வெளியிட்டால், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் படி அவர் குற்றவாளி. ஆனால் வெளியிடவில்லை எனில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி அவர் குற்றவாளி ஆகிறார். இங்கே தான் சிக்கல். எதன் அடிப்படையில் இந்த வழக்கை அணுகப்போகிறது உச்சநீதிமன்றம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முன்னுதாரணம்

இந்த சட்டத்தின்படி ஏற்கனவே இந்தியாவில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை உலுக்கிய மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக கட்டுரை ஒன்றினை எழுதிய தாராகன்ட் திவேதி எலியாஸ் அகேலாவை (Tarakant Dwivedi alias Akela) இந்த சட்டத்தின்படி கைது செய்தனர் அம்மாநில காவல்துறையினர்.

தாக்குதலுக்கு எப்படி ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டன? எப்படி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு அருகில் பதுக்கிவைக்கப்பட்டது? என விவரிக்கிறது அக்கட்டுரை. இது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின்படி குற்றம் என மும்பை மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பளித்த நீதிபதி அகேலா, தகவல் சேகரித்த இடம் (சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் அதனைச்சுற்றி இருக்கும் பகுதிகள்) சர்ச்சைக்குரிய இடம் இல்லை எனவும் இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சரிதான் என்று அகேலாவை விடுவித்தார்.

supreme-court_reuters
Credit: The Wire

2002 ஆம் ஆண்டில் காஷ்மீரைச் சேர்ந்த இப்திகார் கிலானி (Iftikhar Gilani) என்னும் பத்திரிக்கையாளர் இணையத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ஆவணத்தை தரவிறக்கம் செய்ததாக கைது செய்யப்பட்டு ஏழுமாதம் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

வேறு நாடுகளில்

மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இம்மதிரியான சட்டம் இருக்கிறது. ஆனால் இச்சட்டம் குறித்த திருத்தங்களை அனைத்து நாடுகளுமே முழுமூச்சில் எடுத்துவருகிறது. கனடாவில் இந்த சட்டம் பாதுகாப்பு செய்தி சட்டம் எனவும், அமெரிக்காவில் இது உளவுச் சட்டம் எனவும் பெயர்மாற்றப்பட்டு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது.

மியன்மாரில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில், Reuters பத்திரிகையாளர்கள் இருவரின்மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் படி வழக்கு பதியப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ரோஹிங்கிய முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான ஆவணங்களை இந்த பத்திரிக்கையாளர்கள் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சிக்கலில் இருக்கும் இந்த ரஃபேல் விமானம் ஊழல் வழக்கு எப்படி நகரப்போகிறது என்பதை நாடே தீவிரமாக கண்காணித்து வருகிறது.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!