கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த மக்களவைத் தேர்தலுக்கும் அதே சின்னத்தை எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை அளித்தது. தேர்தலில் புதிய கட்சி தங்களது சின்னத்தை மக்களிடையே கொண்டுசேர்ப்பது மிகச்சிரமமான காரியம். அப்படியிருக்க தற்போது பழைய சின்னமும் இல்லை என்ற நிலைக்கு சீமான் தள்ளப்பட்டார். ஆனால் மறுபடியும் ஒரு சோதனை அவருக்கு வந்திருக்கிறது.

சின்னம் தெளிவாக இல்லை
நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த சின்னமானது அவ்வளவு தெளிவாக இல்லை. ஏனெனில் வாக்கு இயந்திரத்தில் ஒட்டப்படும் சின்னத்தினை சரிவர பார்க்க முடியாமல் போவது அக்கட்சிக்கு மிகுந்த பின்னடைவைத்தரும்.
இதனைக் கருத்தில் கொண்டே அக்கட்சியின் வட சென்னை வேட்பாளர் காளியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார் அதில்,”அதில் நான் வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறேன். எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் மாதிரி வாக்குச்சீட்டை வெளியிட்டார். எங்கள் கட்சியின் சின்னம் மங்கலாகவும், தெளிவு இல்லாமலும் இருந்தது. இதனால் எங்கள் கட்சிக்கு வயதானாவர்களும், பார்வை குறைவாடு உள்ளவர்களும் வாக்களிக்க சிரமப்படுவார்கள், இதனால் எங்கள் கட்சியின் சின்னத்தை தெளிவாக எந்திரத்தில் பொறிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
வழக்கு தள்ளுபடி
காளியம்மாள் தொடுத்த இந்த மனுவினை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், “ஒரு கட்சியின் சின்னம் வாக்காளர்களின் மனதில் தெளிவாக இருந்தாலே அவர்கள் தானாகவே வந்து ஓட்டுப்போடுவர்கள். மேலும் வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்டு அனைத்து தொகுதிக்கும் அவை அனுப்பப்பட்டு விட்டதாக தேர்தல்ஆணையம் கூறியுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்றனர்.
வளர்ச்சியைத் தடுக்க சதியா?
தேர்தல் நேரங்களில் இம்மாதிரியான குளறுபடிகள் பெரிய கட்சிகளுக்கே கடும் நெருக்கடியைக் கொடுக்கும். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம். பொருளாதார நிலையில் பல சவால்களை சந்திக்கும் சிறிய கட்சிகளுக்கு இது மேலும் சிக்கலை அளிக்கும். இது இந்தியாவில் புதிதல்ல. பிரபல வேட்பாளரின் பெயரைக்கொண்ட போலி வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்தும் கதையெல்லாம் நிறையவே இங்கு நடந்திருக்கிறது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது சட்டீஸ்கர் மாநிலத்தின் மஹாசமுந்த் தொகுதியில் பா.ஜ.க வின் சந்து லால் சாஹுவை எதிர்த்து 10 பேர் அதே பெயரில் போட்டியிட்டனர். இது அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அஜீத் ஜோஹியின் தூண்டுதலின் பேரில் நடந்தது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடைசியில் வெறும் 1217 வாக்குகள் வித்தியாசத்தில் சந்து லால் வென்றார். தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்க எந்தளவு ஒரு மனிதனுக்கு உரிமை உள்ளதோ அதே அளவிற்கு போட்டியிடவும் உரிமை உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இம்மாதிரியான நடவடிக்கைகளால் புதிய கட்சிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, மற்ற வளர்ந்த கட்சிகளுக்கு இது சாதகமாய் முடிந்துவிடும். ஆகவே இதுபோன்ற பிரச்சினைகளில் தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வெற்றி, தோல்விக்கு இடையில் கடின உழைப்பும், செல்வாக்கும் இருக்கலாமே தவிர சூழ்ச்சி இருக்கக்கூடாது.