மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய காப்பீடுத் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது. நாளை ராஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவக் காப்பீடுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.
மோடி கேர்
மோடி கேர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவக் காப்பீடுத் திட்டம் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடுத் திட்டமாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் காப்பீடுத் திட்டத்திற்கான பயனாளர்கள், கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும்.
15000 மருத்துவமனைகள்
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும்.
மோடி கேர் மருத்துவக் காப்பீடுத் திட்டத்திற்காக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகள், மாநில அரசின் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என்று சுமார் 15 ஆயிரம் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த மிகப்பெரிய மருத்துவக் காப்பீடுத் திட்டம், தீனதயாள் உபாத்யாயா பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தேதி மாற்றப்பட்டு வரும் 23 – ஆம் தேதி (நாளை) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து வருகிற 26-ந்தேதி முதல் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.