சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வீரர்களின் மீது. ஒட்டுமொத்த இந்தியாவும் கலங்கிப்போயிருக்கிறது. துக்கம் இன்னும் வடியவில்லை. ஜெய்ஷ் -இ- முகமத். இந்தியாவை ஒரே எதிரியாக தீர்மானித்து செயல்படும் இது ஐக்கிய நாடுகளால் தடைசெய்யப்பட்டுள்ள ஒர் தீவிரவாத இயக்கம் ஆகும். பாகிஸ்தான் ராணுவத்தின் வேட்டுகளை கைமாத்து வாங்கி காஷ்மீரிலும் டெல்லியிலும் மட்டுமே வைத்துக்கொண்டிருந்த இந்த குட்டி இயக்கம், தற்போது அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாய் மாறியது துரதிருஷ்டவசம்தான்.

ஹர்கட் அல் ஜிஹாத்-ஐ-இஸ்லாமி (Harkat ul-Jihad-i-islami)
பொதுவாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எந்த வித குறிப்பிட்ட நோக்கமும் இருப்பதில்லை. குறிப்பாக ஏதேனும் புரட்சிக்காக உருவாக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஒரு போராட்டக் குழு போராட்டம் முடிவடைந்த பிறகு, வீசிய அரிவாளை வெறுமனே கீழே வைப்பதா? என சும்மா இருக்க முடியாமல் வேறு ஒரு பிரச்சினைக்கு புது இடத்தில் புதுப் பட்டாசு வெடிக்க புதுப் பெயரோடு கிளம்பிவிடும்.
ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ச கொள்கைப்படி ஆட்சி நடப்பதாகவும், அது இஸ்லாமியத்திற்கு எதிராக இருப்பதாகவும் கருதி ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து மக்கள் போராடி வந்தனர். ஆப்கானிஸ்தான் ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரஷ்யா உள்ளே இறங்கியதும் போர் மூண்டது. ஆப்கானிஸ்தானிற்கும் பாகிஸ்தானிற்கும் எல்லைப் பிரச்சினை உண்டு. எல்லையை கைப்பற்ற விரும்பிய பாகிஸ்தான், உள்நாட்டு கிளர்ச்சியை ஆதரித்து ஆப்கன் எல்லையோர மக்களுக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பியது. ரஷ்யா உள்ளே இருப்பதால் அமெரிக்காவும் பாகிஸ்தான் மூலம் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியது. பாக். உதவியில் உருவான கிளர்ச்சியாளர்கள் குழுதான் பின்னாளில் வந்த ஹர்கட் அல் ஜிஹாத்-ஐ-இஸ்லாமி (harkat ul- jihad-i-islami), தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகளாகும். 9 ஆண்டுகள் நடந்த இப்போரில் ரஷ்யா பின்வாங்கியவுடன் தீவிரவாதத் தாய்க்கழகமான ஹர்கட்- மற்றும் தாலிபன் கைகள் ஓங்கின. அதில் குண்டுகளும் துப்பாக்கிகளும் தயாராக இருந்தன.
காலப்போக்கில் தாய் ஹர்கட் இரண்டாக பிரிந்து ஹர்கட் அல்-ஹிஜாபுதீன் (Harkat ul-Mujahideen ) எனும் கிளை உருவானது. மேலும் ஒசாமா பின் லேடனுடன் இணைந்து செயல்பட்டதால் அமெரிக்கா இந்த முஜாவை தடைசெய்தபின் சங்கத்தால் கைச்செலவிற்கு மேற்கு நாடுகளில் இருந்து நிதித் திரட்ட வக்கில்லாமல் போனது. தடையை சமாளிக்க இவை மீண்டும் இணைந்து ஹர்கட் அல் அஸ்ரா(Harkat ul-Asra) என பசைதடைவிக் கொண்டனர். புதிய பெயர். புதிய கொள்கை. செயல் ஒன்றுதான். குண்டு.
மவுலானா மசூத் அசார்
1968 ல் பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்த இந்தக் குட்டித்தீவிரவாதியின் தந்தை ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதை ஆச்சர்யத்துடனே அணுக வேண்டும். இஸ்லாமிய கோட்பாடுகளை தவறாக புரிந்துகொண்ட இவர் புதிய ஹர்கட் அல் அஸ்ரா வில் ஐக்கியமானதும் அதன் கொள்கைப் பரப்பாளாரகவும் மற்றும் ஆள்சேர்ப்பாளராகவும் வேலைசெய்து வந்தார். பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள காஷ்மீரை தலைமை இடமாகக் கொண்டு இந்தியக் காஷ்மீர், மியான்மர், டஜகிஸ்தான், போன்சானியா என பூகோளத்தில் அண்ணன் செய்த வேலைகள் தாராளம். மாட்டிக்கொண்டார் இந்திய ராணுவத்திடம்.

அஸ்ரா தலைவர்கள் கைது செய்யப்பட்டபின் அஸ்ராவின் ஆட்கள் புதிய பெயரில் (Al faron) இந்தியா வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடத்திச்சென்று தலைமையை விடுவிக்குமாறு இந்திய அரசிடம் பேரம் பேசினர். 1995 ஆம் ஆண்டு. ஆனால் மேலும் இரு அஸ்ராக்களை இந்தியா பிடித்ததால் பிணயக்கைதிகள் மரணத்தின் கைதிகளாயினர்.
பேரம் தோல்வியடைந்தது. தொண்டர்கள், தலைமை இல்லாமல் சும்மா இருக்க ISI அவர்களை லஷ்கர் இ-தொய்பா புண்ணியவான்கள் செய்து இந்தியாவிற்குள் ஏவிவிட்டது. அதுதான் தற்போதுவரை காஷ்மீரில் பெரிய பிரிவினைவாத இயக்கமாகும்.
பாகிஸ்தான்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்தில் இருந்து டெல்லி வரவிருந்த இந்தியா ஏர்லைன்ஸ் (IC 814) விமானமானது இந்திய வான்வெளியில் நுழைந்தவுடன் கடத்தப்பட்டது. டெல்லியில் இறங்கியிருக்க வேண்டிய விமானம் அமிர்தசரஸ், லாஹூர், துபாய் என சுற்றி ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் தரையிறங்கியது. கந்தகாரில் தாலிபன் பாதுகாப்புடன் நின்றிருந்த விமானம் பல நாடுகளைச் சேர்ந்த பிணையக்கைதிகளை கொண்டிருந்தது.
பிணையக் கைதிகளுக்கு பதிலாக மசூத் அசார், முஸ்டாக் அகமது சர்கார் மற்றும் அகமது ஓமர் சயீது சேக் என மூன்று தலைமைகளை விடுவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அப்போது IB தலைமையாக இருந்த அஜித் தோவல் (இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) கந்தகார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஒருவாரம் ஆலோசனைக்கு பிறகு மூவரும் விடுவிக்கப்பட்டு பிணையக் கைதிகள் மூன்று கடத்தல்காரர்களுடன் மீட்கப்பட்டனர். அந்தத் தோல்வியை விமர்சித்த தோவல் , பாகிஸ்தானின் ISI இன் ஈடுபாடு இல்லாது இருந்தால் இந்தியா அதிரடியாக கையாண்டிருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் அப்போதிருந்த சூழலை அமெரிக்கா மற்றும் UAE யின் ராணுவ உதவியால் எளிதாக கையாண்டிருக்கலாம். ஆனால் பிணையக் கைதிகளை மனதில் கொண்டு இந்தியா எந்தவித அதிரடியும் மேற்கொள்ளவில்லை. மூன்று தீவிரவாதிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவமே தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் ”பயணம்” என்ற பெயரில் வெள்ளித்திரை கண்டது.
ஜெய்ஸ்-இ-முகமது
அவர்களை கைது செய்யும்படி பாகிஸ்தானை இந்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் அவர்களை (அவர்கள் எல்லைக்குள்ளேயே) கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் விரைவில் பிடித்துவிடுவதாகவும் பாக். அரசு உறுதியளித்தது. விடுவித்த இந்திய அரசுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஜெய்ஸ்-இ-முகமது என்ற அமைப்பை உருவாக்கியதோடு சூட்டோடு சூட்டாக 2001 ஆம் வைத்தார் பாருங்கள் குண்டு இந்திய நாடாளுமன்ற வளாகத்தில். ஜெய்ஸ் இ அமைப்பு நிறுவப்பட ISI ஐயும் தாலிபானும் உதவி புரிந்தன. ஏனெனில் ஆப்கானிஸ்தானின் மக்களாட்சிக்கு இந்தியா உதவுவதே காரணம். இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர்முனைக்கு கொண்டு சென்ற அந்நிகழ்வு உயர்மட்ட கலந்தாய்வுக்கு பின் மெதுவாக சுமூகமானது. பாகிஸ்தானுடன் போர்புரிவதை விட அதனை மன்னிப்பதன் மூலம் இந்தியா அதிக நன்மைகளைபெறும் என மூத்த அமைச்சர்கள் கருதினர். அதுவும் உண்மையே.

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக முழங்கிய அசார் இந்தியாவை அழிக்காது பாக் மக்களுக்கு நல்லுறக்கமில்லை என கூறிக்கொண்டே இருந்தார் . நாடாளுமன்ற தாக்குதலைத் தொடர்ந்து யுகே, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் அந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தன. அவரையும் தான். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க சீனா (ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்) தனது வீட்டோவை (விரும்பாத ஒரு மசோதாவை புறக்கணிக்கும் உரிமை) பயன்படுத்தி தடுத்துவிட்டது. உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தை தொடர்ந்து பாகிஸ்தான் அசாரை கைது செய்து சிறையில் பாதுகாத்தது. எதிர்பார்த்தது போல பாக் நீதிமன்றம் நாடாளுமன்ற தாக்குதலில் அசாருக்கு எதிராக தீர்க்கமான ஆதாரமில்லை என்று அவரை விடுவித்தது.
தொடர்ந்த சதிச்செயலில் ஈடுபட்ட அசார் காஷ்மீரில் பிரிவினை மாநாடு ஒன்று நடத்தி ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இம்முறை ஜெய்ஸ் இ முஜாகிதீன் என்ற பெயரில். புதிய பெயர் பழைய குண்டுகள். நீண்ட கால திட்டத்திற்கு பிறகு 2008 ல் மும்பை தாக்குதல் மற்றும் 2016 இல் Uri எனுமிடத்தில் தற்கொலைப்படை தாக்குதல் என அசாரின் எழுச்சி அரசுக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. ஒப்புக்காகவும் பாக். அரசு ஜெய்ஸ் இ முஜாகிதீன் மற்றும் முகமதை தடைசெய்தது . ஆனால் இன்று வரை அசாரின் கை குண்டு வீசாமல் இல்லை. ராணுவத்தின் கடும் தாக்குதலால் ஒடுங்கிப்போயிருந்த ஜெய்ஸ் இ முகமது இப்போது பல்வாமா தாக்குதலால் மீண்டும் எழுந்து வந்துள்ளது. அதாவது 2015ல் ஒரு போராளிகூட இல்லாத அமைப்பு அடுத்த வருடம் வெறும் ஆறு பேரை கொண்ட அமைப்பை இன்று 150 கிலோ RDX ஐ துல்லியமாக திட்டமிட்டு வெடிக்க வைத்துள்ளது. காஷ்மீரை பாகிஸ்தான் உடன் இணைப்பதேஅதன் நிறைவேறாத நோக்கமாகும். மேலும் இந்தியாவிற்குள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் மதிப்பை சர்வதேச அளவில் நிலைநிறுத்துவதையே லட்சியமாக கொண்டுள்ளது.
இப்போது பாகிஸ்தானின் உளவுத்துறையால் பாதுகாக்கப்படும் அசார் 2003 வாக்கில் அவர்களின் ஜனாதிபதியையே கொல்லத் துணிந்தவர் ஆவார். ஆனாலும் இந்தியாவை அழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் பாதுகாக்கப்படுகிறார். இதற்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் அது அசாரும் அவருடைய அடிவருடிகளும் மீண்டெழா வண்ணம் இருக்கும்.அதுதான் இந்தியர்கள் அனைவரும் எண்ணமும் கூட. நமக்காக உயிர்நீத்த வீரர்களின் ஆசைப்படி வேற்றுமை மறந்து ஒற்றுமை வளர்ப்போமாக ! வந்தே மாதரம்.