அமெரிக்கா என்றவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது அதன் பிரம்மாண்டம். உல்லாசமான வாழ்க்கை, கைகளில் தாறுமாறாய் புரளும் டாலர், பிசியான மனிதர்கள், வலிமையான ராணுவம், உலகின் அதிக பணக்காரப் பெருந்தலைகள், ரஷியாவை அவ்வப்போது சீண்டும் வெள்ளை மாளிகை எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எப்படி அமெரிக்கா மட்டும் இவ்வளவு புகழுடனும், சர்வ வல்லமை படைத்த நாடாக இருக்கிறது ? நம் நாட்டு இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை என்பது ஆதர்சம். அமெரிக்காவின் பலத்திற்குக்காரணம் என்ன தெரியுமா? அதன் பணம்.

இரண்டாம் உலகப்போரும் அமெரிக்காவும்
இரண்டாம் உலகப்போர் ஹிட்லரின் தலைக்குள் துப்பாக்கிக்குண்டு புகுந்த கனத்தில் முடிவிற்கு வந்தது. அதன்பின் யார் பெரிய ஆள் என்பதை நிரூபிக்கப் பல நாடுகளும் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. அமெரிக்கா தெளிவான திட்டத்தை முன்வைத்தது. உலகம் முழுவதும் நடைபெறும் வர்த்தகத்திற்கு டாலரையே பணமாகப் பயன்படுத்த பல நாடுகளும் ஒப்புக்கொண்டன. அமெரிக்காவின் பணமான டாலரை உலகப் பணமாக அறிவித்தது பிரெட்டன் வூட் (Bretton Wood) மாநாடு. அன்று ஆரம்பித்த ஏற்றம் இன்று வரை தொடர்கிறது.

டாலர் என்னும் பூதம்
முன்னணி வர்த்தகப் பொருள்களான கச்சா எண்ணெய், வாகனங்கள், உணவு, உலோகங்கள் ஆகியவைகளின் ஏற்றுமதி டாலரில் தான் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டுமானால் அந்தந்த நாடுகளில் உள்ள தலைமை வங்கிகளில் உள்நாட்டுப் பணத்தினைக் கொடுத்து அதற்கு ஏற்ற டாலரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் டாலரை வர்த்தகத்திற்குப் பயன்படுத்தும் எல்லா நாடுகளுக்கும் அமெரிக்காவில் கணிசமான அளவு முதலீடு இருக்கும். இந்த முதலீடு அமெரிக்காவின் பெரும்பலம்.
டாலர் மதிப்பு
உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகள் டாலரை வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவதால் ஒரு நாட்டினுடைய பண மதிப்பு டாலருடன் ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு என்று சொல்வது அதைத்தான். பல காரணங்களால் பணத்தின் மதிப்பு குறையலாம். அளவுக்கு அதிகமான பணப்புழக்கம், கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம் போன்றவை பணமதிப்பை வெகுவாகக் குறைத்துவிடும். கென்யா, வெனிசுலா போன்ற நாடுகள் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தது இதனால் தான். டாலரின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க எல்லா நாடுகளும் கடும் பொருளாதார வீழ்ச்சியினை சந்திக்க நேரிடும்.
