அவசரப்படாதீர்கள் இந்தச் சட்டம் அமலிற்கு வந்திருப்பது வங்க தேசத்தில். ஓராண்டிற்குச் சராசரியாக 12 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக அந்நாட்டுக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் தலைநகர் டாக்காவில், பேருந்து மோதி இருவர் இறந்த நிகழ்வு அந்நாட்டு மக்களைப் போராட்டக்களத்தில் இறங்க வைத்தது.

அச்சம்பவத்தையடுத்து போக்குவரத்துத் துறைகளில் இருக்கும் குளறுபடிகளைச் சரி செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். சுமார் இரண்டு மாதம் வங்கதேசம் முழுவதும் இப்போராட்டங்கள் நீடித்தன. இதனால் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளும் நாட்டின் தரமற்ற சாலைகளே விபத்துகளுக்கு முதற்காரணம் என்று தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் போராட்டக்காரர்கள், அமெரிக்கத் தூதுவரின் காரை எரிக்க, பதற்றம் உச்சநிலையை எட்டியது.
அரசின் அவசரம்
இதனையடுத்து அவசர அவசரமாக காவல்துறை அதிகாரிகளுடன் அதிபர் கலந்துரையாடினார். போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர அரசு உத்தேசித்திருக்கிறது. மேலும் சாலைகளைத் தரம் உயர்த்தவும், புதிய சாலைகளுக்கான பணிகளைப் பற்றியும் விவாதம் நடந்தது. இதனையடுத்து பொதுமக்களிடையே சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் தண்டனைகள் மூலம் இவ்விதி மீறல்களைக் குறைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை
வங்க தேசத்தில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகன ஓட்டிகளால் தான் நிகழ்கின்றன. இதனைத் தடுக்கும் விதத்தில் அரசு புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது அரசு. இது குறித்து டாக்கா நகரக் காவல்துறை ஆணையர் அசத் உஸ்ஸமான் மியா (Asaduzzaman Mia) தெரிவிக்கையில்,” இனி தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தரப்படமாட்டாது. மேலும் பின்னிருக்கையில் பயணம் செய்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.” என்றார்.

தமிழக அரசும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சட்டங்கள் ஆந்திர பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துக்களைக் குறைப்பதில் பொதுமக்களின் அலட்சியப் போக்கே மிக முக்கியக் காரணம் என்கின்றனர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.