லண்டன் உலக வரலாற்றின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஐரோப்பிய நாகரீக வளர்ச்சியும், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சியும் சந்திக்கும் இடமாக லண்டன் இருந்திருக்கிறது. காலமாற்றம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் நிகழ்ந்த போதும் தனது அடையாளத்தை தக்கவைத்துக்கொண்ட ஒரே நகரமும் அதுதான். இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய அந்நகரம் தற்போது மிகப்பெரிய சிக்கல்களை சுமந்துவருகிறது.

அச்சுறுத்தும் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டிற்கு சுமார் 9,000 மக்கள் பலியாகின்றனர். மேலும் இந்த நிலையை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு 3.7 பில்லியன் யுரோக்களை ஒதுக்கியுள்ளது. இருப்பினும் இரக்கமில்லாத காலநிலை மாற்றங்கள் மற்றும் எழும்பை உருக்கும் குளிர், அதனைத் தடுக்க ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவற்றின்மூலம் ஏற்படும் மாசுபாடு என அடுத்தடுத்த துயரங்களால் லண்டன் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இயற்கைக்கு திரும்புதல்
லண்டனைச் சூழ்ந்துள்ள இந்த ஆபத்துகளிலிருந்து நகரத்தைக் காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்துவந்தாலும் இயற்கை சார் வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதே சிறந்த மற்றும் நீண்டகால தீர்வைத் தரும். இதையே தான் அவர்கள் பின்பற்ற இருக்கிறார்கள். என்ன என்கிறீர்களா? லண்டன் முழுவதும் காட்டை உருவாக்க மிகப்பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட இருக்கிறது.
வரலாற்றில் மிக முக்கியத் திட்டமாக இடம்பெற இருக்கும் இது டேனியல் ரேவன் எல்லிசன் (Daniel Raven-Ellison) என்னும் புவியியல் ஆசிரியர் ஒருவரின் மூலமாகத் தான் முதலில் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 32,000 யூரோக்கள் வரை நிதியாகப் பெறப்பட்டிருக்கிறது.

ஓகே சொன்ன கவர்னர்
தற்போதைய லண்டன் நகரத்தின் கவர்னராக இருந்துவரும் சாதிக் கான் (Sadiq Khan) இத்திட்டத்திற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதில் பங்குகொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்திற்கான பிரத்யேக அழைப்பை கவர்னர் வெளியிட்டார். பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ள இந்த அழைப்பினை ஏற்று உலகம் முழுவதிலுமிருந்து நிதியானது சேகரிக்கப்படு வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 9 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. லண்டனில் தற்போது 3.8 லட்சம் மரங்கள் உள்ளன. ஆனாலும் பெருகிவரும் மாசுபாடு காரணமாக மரத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரையில் புற்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அவர்கள் Rain Gardens என்று அழைக்கிறார்கள்.

பூங்கா நகரம்
லண்டனின் மொத்த நிலப்பரப்பில் 18% பூங்காக்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதனை விரிவுபடுத்தவே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய கான்,” லண்டனின் எதிர்காலம் இந்தத் திட்டத்தில் தான் இருக்கிறது. மரங்களை வளர்ப்பது மட்டுமன்றி, மறுசுழற்சியிலும் நகரம் தீவிரமாக இறங்கவேண்டிய காலம் வந்துவிட்டது. இன்று துவங்கியிருக்கும் இந்தப்பாதை நிச்சயம் வளமான, பசுமையான லண்டன் நகரத்திற்குச் செல்லும் வழியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை” என்றார்.