பிரெக்ஸிட்(Brexit) count down!
2016 முதல் இன்றுவரை இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரு வார்த்தை “BREXIT”. அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து UK விலகுவதை குறிக்கும். “BRITAIN EXIT – BREXIT” சரி, அதென்ன UK, BRITAIN?. நமக்கு பொதுவாக பிரிட்டிஷ் என்றால் இங்கிலாந்து தான் நினைவுக்கு வரும். மேலும் இதைப் பற்றி நமக்கு என்ன கவலை? இதை ஏன் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதால் நமக்கு மட்டுமல்லாது அனைத்து நாடுகளுக்கும் நன்மை தீமைகள் இரண்டுமே உண்டு. ஆர்வமிக்க இந்தியர்களாகிய நாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு சக கண்டத்தின் சிரமத்தை தெரிந்துகொள்வது அவசியம். BREXIT பிரச்சினை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், அதனுடைய சுருக்கமான வரலாறை அறிந்துகொள்ள வேண்டும்.
UK, BRITAIN, ENGLAND?
UK- UNITED KINGDOM OF GREAT BRITAIN AND NORTHERN IRELAND.
யுகே என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளை குறிக்கும். வடக்கு அயர்லாந்து ஒட்டுமொத்த அயர்லாந்தின் ஒரு பகுதியாகும். மீதமுள்ள அயர்லாந்து Republic of Ireland என அழைக்கப்படுகிறது. Republic of Ireland ஆனது UK உடன் தொடர்பில் இல்லை. இதில் வடக்கு அயர்லாந்தை தவிர்த்து உள்ள பிற மூன்று நாடுகளே பிரிட்டன் ஆகும்.
1536 ஆண்டில் இங்கிலாந்து ராஜ்ஜியமும் (Kingdom of England) வேல்ஸ் -ம் இணைந்து வலுவான KINGDOM OF ENGLAND என்றாயின. சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்காட்லாந்தும் சில தீவுகளும் இவற்றோடு இணைந்து கொண்டதால் இவையனைத்தும் தங்கள் ராஜ்ஜியத்தை BRITAIN அல்லது GREAT BRITAIN என்று அழைத்துகொண்டன. இந்த பிரிட்டனின் படையெடுப்பில் சிக்கிய முதல் நாடுதான் அயர்லாந்து. தற்போது வரை அயர்லாந்து ஒரு முழு நாடாகவும் இல்லாமல் முழுவதும் பிரிந்த நாடாகவும் இல்லாமல் கலாச்சார ரீதியாக மட்டும் இரு பகுதிகளாக கருதப்படுகிறது. அதாவது எந்தவித எல்லையும் இவற்றுள் வகுக்கப்படவில்லை.
ஐரோப்பிய யூனியன் உருவாக்கம்
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த போதும் ஐரோப்பிய அண்டை நாடுகளுக்குள் இருந்த மனப்போர் முடிந்தபாடில்லை. அதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் அமைதியின்மையை மீட்டெடுக்கும் பொருட்டு பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, லக்ஸும்பெர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகள் 1957 ஆம் ஆண்டுவாக்கில் “Treaty of Rome” ஒப்பந்தம் மூலம் “European Coal and Steel Community” என்ற அமைப்பை உருவாக்கின. ஒப்பந்தம் பூண்ட நாடுகள் மத்தியில் இருந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரியை நீக்குவதன் மூலம் பொருளாதார மேன்மையடைவதே இதன் ஆரம்பகால நோக்கமாகும். இதனால் இந்நாடுகள் அடைந்த வளர்ச்சி கண்டு பிற ஐரோப்பிய நாடுகளும் வரிசையாக அவற்றோடு சேர்ந்து கொண்டன. இந்த வரிசையில் 1973 ல் UK வும் சேர்ந்துகொண்டது.
நடைமுறைகளும் மனஸ்தாபமும்
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு இனைய வேண்டுமெனில் முதலில் அது தனது இறையாண்மையை விட்டுக்கொடுக்க வேண்டும். அதன்படி அந்த நாட்டு நீதித்துறை, காவல்துறை, ராணுவம், என அனைத்தும் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சில முக்கிய அம்சங்களாவன :
- உறுப்பு நாடுகள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒன்றியத்திடம் செலுத்த வேண்டும். அதனைக்கொண்டே உறுப்பு நாடுகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை ஒன்றியம் செய்துதரும் .
- ஐரோப்பிய நாடுகளுக்குள் எந்தவித தனிப்பட்ட வரிவிதிப்பும் கிடையாது.
- எந்தநாட்டு (ஐரோப்பிய) மக்களும் எப்போது வேண்டுமானாலும் எந்த நாட்டில் (ஐரோப்பிய) வேண்டுமானாலும் குடியேறிக்கொள்ளலாம். அதாவது அவர்கள் பிறநாட்டு எல்லைகளுக்குள் நுழையும்போது பாஸ்போர்ட் கொண்டு செல்லவேண்டிய அவசியம் இல்லை.
- சில நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தை விட்டுவிட்டு ஒன்றினைந்த யூரோ (euro) நாணயத்தை பயன்படுத்தி கொள்ளலாம். யூரோவைப் பயன்படுத்தும் நாடுகள் Eurozone என அழைக்கப்படுகிறது.
இந்த அடிப்படை விதிமுறைகளே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு முக்கிய காரணங்களாகும்.
ஏனெனில் UK மற்றும் சில நாடுகள் தங்களது நாணயத்தை விட்டுத்தரத் தயாராக இல்லை. இது தங்களது இறையாண்மையை பாதிப்பதாகக் கருதி ஆரம்பம் முதலே தங்கள் நாட்டு நாணயத்தையே பயன்படுத்தி வந்தன. அரைநூற்றாண்டிற்கும் மேலாக ஐரோப்பிய யூனியனில் முஸ்தபா முஸ்தபா பாடிய போதெல்லாம் இறையாண்மைக்கு பாதிப்பு வரவில்லையா?
இத்தனை ஆண்டுகளாய் பல லாபங்களை இதன்மூலம் அனுபவித்த யுகே இப்போது ஏன் இந்த அந்தர்பல்டி அடிக்கிறது?
வலிமைவாய்ந்த கூட்டமைப்பில் இருந்து விலகுவதால் என்ன பலன் யுகேவிற்குக் கிடைக்கப்போகிறது?
ஐரோப்பிய யூனியனில் இருந்து அவர்கள் விலகுவதால் இந்தியா எம்மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்? இவையெல்லாம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.