ஈரான் – அமெரிக்கா சிக்கல் போராக மாற்றம் பெற இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் சவுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கான அனுமதியை காங்கிரசுடன் கலந்து ஆலோசிக்காமல் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது அமெரிக்காவின் மேல்மட்ட வட்டாரத்தில் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் எரிச்சல்
அமெரிக்காவில் இருந்து பெரிய அளவில் ஆயுதங்கள் விற்க அந்நாட்டு காங்கிரசிடம் அனுமதிபெற வேண்டும். ஆனால் ட்ரம்ப் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தை மையப்படுத்தியே சவுதிக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளார். இதனால் ட்ரம்ப் மீது காங்கிரஸ் கடும் கடுப்பில் இருக்கிறது. ஏற்கனவே மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரத்தில் காங்கிரஸ் நிதி ஒதுக்கவில்லை என்றால் எந்த கோப்பிலும் கையெழுத்து போடமாட்டேன் என நாடுமுழுவதும் அரசாங்கத்தை ஷட் டவுன் செய்தார் ட்ரம்ப்.
1500 வீரர்கள்
அமெரிக்காவிலிருந்து 1500 வீரர்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது. இதுவும் ட்ரம்பின் ஆலோசனையின் பெயரில்தான் நடந்திருக்கிறது. இது மிகவும் சிறிய படைதான் என ட்ரம்ப் கூறியிருப்பது அவர்மீதான கோபத்தை காங்கிரசிற்கு அதிகரித்திருக்கிறது.

போர் பதற்றம்
ட்ரம்பின் இந்த அடுத்தடுத்த அதிரடியால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓமன் வளைகுடாவில் பாதிப்புக்குள்ளான இரண்டு எண்ணெய்க் கப்பல்களை ஈரான் தான் தாக்கியது என சவுதி உள்ளிட்ட அரசுகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் அமெரிக்கா அவர்களுக்கே ஆயுதங்களை விற்பது உலக அரசியலில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானுடனான வர்த்தக உறவை தனது நட்பு நாடுகள் அனைத்தும் துண்டித்துக்கொள்ளவேண்டும் என ஏற்கனவே அமெரிக்க வலியுறுத்திவந்த நிலையில், ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கோடு ட்ரம்ப் அரசாங்கம் இந்த திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது. இதுகுறித்து பேசியிருக்கும் ஈரான் அதிபர்.” அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் ஈரான் அடிபணியாது” என்றிருக்கிறார்.

ட்ரம்ப் என்னும் தலைவலி
அமெரிக்க வரலாற்றில் அம்மக்கள் செய்த மிகப்பெரும் தவறு ட்ரம்பை தேர்ந்தெடுத்ததுதான் என்று நினைக்கும்படித்தான் ட்ரம்ப் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. சீனாவுடனான வர்த்தகப்போரில் சுமூக பேச்சுவார்த்தைக்கு வழியே கொடுக்காமல் சீனாவை கீழிறங்கி போகச்சொல்லும் ட்ரம்பின் எதேச்சதிகார மனோபாவம் தான் ஈரானையும் பாடாய் படுத்துகிறது.
தன்னிடம் உள்ள அனைத்து அணுஆயுத கிடங்கையும் மூடிவிடுவதாகவும், யார்வேண்டுமானாலும் வந்து சோதனை செய்துகொள்ளலாம் என ஈரான் அறிவித்தபிறகும் ட்ரம்ப் தனது விபரீத விளையாட்டை ஆடத் தொடங்கியிருக்கிறார். எதிர்வரும் காலங்களில் ஈரான் என்னவாகப்போகிறது? ஒருவேளை அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால் ஈரானுக்கு ஆதரவாக நிச்சயம் சீனாவும், ரஷியாவும் களம்காணும். அப்படி ஒன்று நிகழும் பட்சத்த்தில் ட்ரம்பால் கூட பிரச்சினையை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியாது.