உலகம் முழுவதும் இந்தியாவின் நேற்றைய பதிலடி குறித்துதான் பேசப்பட்டுவருகிறது. புல்வாமா தாக்குதலுக்குக் காரணமாக இருந்த ஜெய்ஷ் – இ – முகமது இயக்கத்தை வேரறுக்க இந்திய ராணுவம் இரகசியத் திட்டம் ஒன்றை வகுத்து வந்திருக்கிறது. 44 வீரர்களின் கண்ணீருக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என இந்திய அரசின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து வந்தாலும், எப்போது என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
இந்நிலையில் நேற்று காலை சரியாக 3.30 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பால்கோட் பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் தீவிரவாத இயக்கத்தின் இருப்பிடத்தில் இந்தியா ராணுவம் அதிரடியாக புகுந்து குண்டுமழை பொழிந்தன. வானளந்த போர் விமானங்களின் சத்தத்தில் அதகளம் கண்டது பால்கோட்.
தாக்குதல்
இந்திய விமானப்படையின் இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விஜய் கோகலே,” பாகிஸ்தான் அரசிடம் ஜெய்ஷ் இயக்கத்தின் இருப்பிடம் குறித்த தகவல்களை அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மறைமுகமாக தீவிரவாத இயக்கங்களுக்கு உதவிவரும் பாகிஸ்தானைக் கண்டிக்கவும், மீண்டும் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதலை ஜெய்ஷ் இயக்கம் நடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இந்திய ராணுவம் இத்தகைய தாக்குதலை நடத்த வேண்டியிருந்தது” என்றார்.
கைபர் குன்றுக்கு அருகில் உள்ள பால்கோட் என்னும் இடத்தில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளை இந்தியாவின் மிராஜ் 2000 ரக போர் விமானம் வீசி எறிந்தது. ஜெய்ஷ் இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரின் (Masood Azhar) நெருங்கிய உறவினரான மவுலானா யூசுப் அசார் (Maulana Yousuf Azhar) மற்றும் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.
மிராஜ் 2000
இந்திய வான் படையில் இடம்பெற்றிருக்கும் மிராஜ் 2000 ரக போர் விமானம் பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. ஆண்டு 1982. பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து F-16s ரக விமானங்களை வாங்க அதற்குப் பதிலடியாக இந்தியாவால் வாங்கப்பட்டது தான் இந்த மிராஜ் 2000. அப்போது ஒருவர் மட்டும் இருக்ககூடிய (single-seat Mirage 2000Hs) 36 போர் விமானங்களையும், இருவர் அமரக்கூடிய (twin-seat Mirage 2000THs) 4 விமானங்களையும் இந்திய அரசு வாங்கியது. தற்போது இந்தியாவில் 41 தரம் உயர்த்தப்பட்ட மிராஜ் விமானங்கள் உள்ளன.
என்னென்ன அம்சங்கள் உள்ளது?
மிராஜ் 2000 விமானத்தில் HOTAS (hands-on throttle and stick ) என்னும் வசதி உள்ளது. இதன்மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தகவல்கள் துண்டிக்கப்படும் வேளையிலும் விமானத்தால் சிறப்பாக இயங்க இயலும். விமானத்தின் ரேடார் திரையானது Sextant VE-130 எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படியில் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தை செலுத்துதல், இலக்கை குறிவைத்து அழித்தல் போன்ற பணிகளுக்கு இது துணைபுரியும்.
அதிக உயரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 2,336 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த விமானம் தாழ்நிலையில் பறக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 1,110 வேகத்தில் சீறிப்பாயும் வலிமை கொண்டது. லேசர் மூலம் இயக்கக்கூடிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் இவ்விமானம் தரை மற்றும் வான் இலக்குகளைத் துல்லியமாக அளிக்கவல்லது.

இந்தியா தவிர்த்து பிரான்ஸ், எகிப்து, பெரு, ஐக்கிய அரபு அமீரகம், கிரீஸ், தைவான், கத்தார் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் வான் படையிலும் மிராஜ் 2000 போர்விமானம் இருப்பது குறிப்பிடத்தக்கது.