வசந்த காலத்தை வண்ணப் பொடிகள் தூவி வரவேற்கும் நிகழ்வே ஹோலிப்பண்டிகை எனப்படுகிறது. இது ரங்குபஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. ரங்கு என்றால் வண்ணம். பஞ்சமி என்றால் ஐந்து. பெளர்ணமிக்கு ஐந்தாம் நாள் வருவது இறுதிப் பண்டிகை நாளான ரங்கு பஞ்சமி. வாழ்வில் கவலைகள் மறந்து மகிழ்ச்சி பொங்கிட வண்ண மயமான வாழ்வு மலர்ந்திடும் நோக்கோடு வண்ணப்பூச்சுகளால் உடல் நனைக்கிறார்கள் மக்கள். ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஹோலியின் வரலாறு
ஹோலிக்கு இரண்டு காரண கதைகள் சொல்லப்படுகிறது. முதலாவது, நாராயணன் நாமத்தை தவிர வேறு ஒரு நாமத்தையும் சொல்லேன் என்ற பிரகலாதனின் தந்தை இரண்யகசிபுவின் தங்கை ஹோலிகாவின் மரண நாள்.
தன் பெயரை உச்சரிக்காது, உலகளந்தானின் பெயரை உச்சரிப்பதால் பிரகலாதனை அழிக்கவும் துணிந்தான் இரண்யகசிபு. பிரகலாதன் மேல் தீமூட்டி அவனை எரியச் செய்தால் வெம்மை தாங்காமல் தன் பெயரை உச்சரிப்பான் என்று எண்ணிய இரண்ய கசிபு, இதற்கு தன் தங்கை ஹோலிகாவின் உதவியை நாடினான். தீயால் எவ்வித பாதிப்பும் அடையாத கம்பளம் ஒன்றினைக் கொண்டவளான ஹோலிகாவின் மடியில் பிரகலாதனை அமரச்செய்வது.

பின்பு தீ மூட்டுவது. கம்பளத்தின் உதவியால் ஹோலிகாவிற்கு ஏதும் தீங்கு நேராது என தப்புக்கணக்கு போட்டான் இரண்யன். ஆனால் திருமாலோ தீ பரவுவதற்கு முன்பே ஹோலிகாவின் கம்பளத்தை பிரகலாதன் மீது போர்த்தி அவனைக் காப்பாற்றினர். ஹோலிகாவோ தீயில் மாண்டுபோனாள். துர்குணங்கள் கொண்ட ஹோலிகாவின் மரண நாளையே அனைவரும் ஹோலியாக கொண்டாடுவதாக ஒரு கதை இருக்கிறது.
இரண்டாம் கதை
சிவபெருமான் தவத்தில் இருந்தபோது பார்வதி தேவி அவரை மணப்பதற்கு விரும்பினார். சிவனின் தவத்தைக் கலைத்தால்தானே மணம் செய்ய முடியும். அதற்கு உதவும் பொருட்டு மன்மதனைப் பார்வதி தேவி நாட, அவன் சிவபெருமானின் மீது தன் ஆயுதத்தைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.
தவம் கலைந்து எழுந்த சிவன் சினத்துடன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமதேவனைப் பார்க்க, அவன் உடல் எரிந்தது. மன்மதனின் மனைவி ரதியின் வேண்டுதலுக்கு இரங்கிச் சிவபெருமான் காமனை உயிர்ப்பித்தார். காம தேவன் உயிர் பிழைத்த நாளையே ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது.

சமத்துவம்
தீயவர்களுக்கு எதிராக நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டை மறந்து ஒரு சேரவேண்டும் என்பதை இவ்விழா உணர்த்துகிறது. இந்த இளவேனிற்காலம் அனைவரின் வாழ்க்கையிலும் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவருக்கும் எழுத்தாணியின் சார்பில் ஹோலிப்பண்டிகை வாழ்த்துக்கள்.