காமராசர், பள்ளிக்கூடங்கள் திறந்து வைத்தார்; மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்; அணைகள் கட்டினார். 1960-களில் அவர் கல்வியறிவு பெற்ற ஒரு தலைமுறையை உருவாக்காமல் இருந்திருந்தால், இன்று தமிழகமும் ஏதோ ஒரு வட இந்திய மாநிலம் போல் தான் இருந்திருக்குமோ என்னவோ…
அரசியல்வாதிகளின் நேர்மை பற்றிய பேச்சை எடுக்கும் போதெல்லாம், அங்கே மேற்கோளாக பெருந்தலைவர் காமராசர் இருப்பார். அவரை தேர்தலில் தோற்கடித்த பின்னர், 50 வருடங்களுக்கு பிறகும் காமராசர் ஆட்சிக்கு மக்கள் ஏங்குகிறார்கள் என்றால் காரணம் தான் என்ன?
நேர்மைக்கு பெயர் பெற்ற காமராசரின் ஆட்சி முறையில் செய்யப்பட்ட சில மகத்தான, பெரிதும் அறியப்படாத திட்டங்களை பற்றி நாம் இங்கே தெரிந்துகொள்ளலாம். படித்துவிட்டு பின்னர் மீண்டும் ஏங்குங்கள் காமராசர் ஆட்சி வேண்டும் என்று… ஏனெனில் மனிதாபிமானத்துடன் இறுதி வரை வாழ்ந்த தலைவர் அவர் ஒருவரே.
- வைகை அணை, காமராசர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதற்காக ரூ. 5 கோடி பணம் ஒதுக்கினார்கள். அணை கட்டி முடித்தபின், ஐந்து இலட்சம் ரூபாய் மீதி இருந்தது. காமராசர் என்ன செய்தார் தெரியுமா? அப்பணத்தில், வைகை அணையில் பூங்கா கட்டுவதற்கு உத்தரவிட்டார், காமராசர். திட்ட மதிப்பீட்டுக்குள் அணையையும் கட்டி, பூங்காவையும் கட்டி முடித்தது சிறப்பான, பொறுப்பான, நேர்மையான நிர்வாகம்.
- காமராசர் ஆட்சிக் காலத்தில் 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தொடங்கத் திட்டமிடப்பட்டன. இதற்கான எந்திரங்கள் சப்பான் நாட்டிலிருந்து வரவேண்டும். அதிகாரிகளைச் சப்பானுக்கு அனுப்பி, எந்திரங்களைப் பார்வையிட்டு, நல்ல எந்திரங்களாக வாங்கி வருமாறு, காமராசர் உத்தரவிட்டார். அதிகாரிகள் சப்பான் நாட்டுக்குச் சென்றனர். எந்திரங்களைப் பார்வையிட்டனர். எந்திரங்களைத் தயாரித்து விற்கும் சப்பான் நிறுவனம், அந்த அதிகாரிகளிடம் கூறிய செய்தி, “பெரிய எந்திரங்களை வாங்க வந்த உங்களுக்கு, நாங்கள் எங்கள் வழக்கம்போல், கமிசன் தர விரும்புகிறோம். அதனைப் பணமாகத் தரவா? பொருளாகத் தரவா? என்று கேட்டனர். சப்பான் சென்ற தமிழ்நாட்டு அதிகாரிகள், காமராசரிடம் தொடர்பு கொண்டு பேசினர். காமராசர் அவர்களிடம் கூறிய செய்தி, “9” எந்திரங்களுக்குத் தரும் பணத்தைக் கொண்டு, 10 எந்திரங்கள் தரமுடியுமா? என்று அவர்களிடம் கேளுங்கள்”. சப்பானிய நிறுவனம் 10 எந்திரங்கள் தரச் சம்மதித்தது. தமிழக அதிகாரிகள் நேர்மையாக இருந்ததால், 10 எந்திரங்கள் தமிழகத்துக்கு வந்தன. தமிழகத்தில் அப்பொழுது தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எண்ணிக்கை, 9 இலிருந்து 10 ஆக உயர்ந்து விட்டது.
- காமராசர் முதல்வராக இருந்த சமயம். மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க, முதலமைச்சருக்கென்று சுமார் 20 இடங்கள், அவர் விருப்பம் போல் ஒதுக்கீடு செய்ய அனுமதி இருந்தது. காங்கிரசுக் கட்சிக்காரர்களும், பணக்காரர்களும், எப்படியாவது அந்த ஒதுக்கீட்டில், தங்கள் பிள்ளைகளுக்கு இடம் பெற முயற்சித்தனர். மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள், நுழைற்த காமராசர் சுமார் 20 நிமிடங்களில், 20 விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்து விட்டு வெளியே வந்தார். ஒரு அதிகாரி, காமராசரிடம் கேட்டார். “எப்படி 20 நிமிடங்களுக்குள், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து, உங்களால் தேர்வு செய்ய முடிந்தது? காமராசர் கூறிய பதில்:- “விண்ணப்பப் படிவத்தில், பெற்றோரின் கையொப்பம் என்று கேட்டிருந்த இடத்தில் எங்கெல்லாம் கைநாட்டு (இடது கைப் பெருவிரல் ரேகை) வைக்கப்பட்டிருந்ததோ அந்த விண்ணப்பங்களையெல்லாம் தேர்வு செய்துள்ளேன். அப்பன் கைநாட்டு என்றால், மகன் முதல் தலைமுறையாகப் படிப்பவனல்லவா? அப்படித் தானே மாணவர்களைத் ஊக்கப்படுத்தவேண்டும்”.
- தமிழகம், ஆந்திரா, கேரளம், கன்னடம், என 4 – மொழிப் பகுதிகளும் இணைந்திருந்த சமயத்தில் மெட்ராஸ். இராஜதானிப் பகுதிக்கு (Madras Presidency), 1948 கால கட்டத்தில், காந்தியின் சம்பந்தியான, இராசாசியின் செல்வாக்கையும் தாண்டி, காமராசர் தலைவராக வந்தது, எளிதான செயல் அல்ல.
- இராசாசி மூடிய பள்ளிகளையும் திறந்து, மேலும் பல புதிய பள்ளிகளைத் திறந்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார், காமராசர். காமராசர் இப்புதிய திட்டங்களைத் தொடங்கியதும் அதனைத் தமிழகம் முழுவதும் உடனடிச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் அப்போதைய கல்வித் துறை அதிகாரி நெ. து. சுந்தரவடிவேலு மற்றும் கா. திரவியம் I.A.S. சென்னையில் தீட்டப்பட்ட கல்வித்திட்டம், தெற்குக் கோடிக் கன்னியாகுமரி வரையிலும் சிறப்பாகச் சென்று சேர்ந்ததற்கு, இந்த இரு அதிகாரிகளின் செயல்பாட்டினைப் பாராட்டித் தான் ஆகவேண்டும். (நல்ல அதிகாரிகள் இல்லையென்றால், சிறப்பான திட்டங்கள் கூட முடங்கிவிடும்).
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா… பெருந்தலைவர் போல் இந்த நாடு பார்த்ததுண்டா…
கட்டுரை தொடர்பான சில துணுக்குகள்:-
சின்னச் சின்னப் பிழைகளுக்குக்கெல்லாம் ஏன் மதிப்பெண்ணைக் குறைக்கிறீர்கள் என ஒரு மாணவன் ஆசிரியரிடம் சண்டை போட்டான்.
ஆசிரியர் கூறிய பதில்:- சின்னச் சின்னப் பிழைகள் எப்படிப் பொருளை மாற்றிவிடுகின்றன என்பதைப் பழைய முன்னுதாரணங்களைக் கொண்டு விளக்கினார். முன்பு, மாணவர்கள் எழுதிய வாசகங்கள்: –
1 ) காமராஜர் எங்கள் பள்ளிக் கூடத்தைத் திறந்து வைதார். (வைத்தார்).
2 ) காந்திஜி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கெடுத்தார். (கொடுத்தார்).
சொ. பாசுகரன்.
ஆனந்து அடுக்ககம்,
16, பு.யு. சாலை,
சென்னை – 21.
98403 16020.