இந்தியாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்நாட்களில் IANS மற்றும் சி.வோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளன. நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மக்களிடம் தங்கள் மாநில முதலமைச்சர்கள் பற்றியும், மாநில அரசின் செயல்பாடுகள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான மக்களின் பதில்களைக் கொண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தெறிக்கவிட்ட தெலுங்கானா
பட்டியலில் சுமார் 68.3 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்று தெலுங்கானா மாநில முதலமைச்சர் திரு.சந்திரசேகர ராவ் முதலிடம் பெற்றுள்ளார். வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3016 வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு வருடாந்திர மானியமாக 5௦௦௦௦ ரூபாய் என கலியுக கர்ணனனாக வாரி வழங்கியதால், அதற்கு மக்களும் புள்ளிகளாக கைமாறு செய்துள்ளார்கள். அடுத்ததாக இரண்டாம் இடத்தில இருப்பவர் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாகூர் (பாஜக). பட்டியலில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 3-வது இடத்தையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது இடத்தையும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி 5-வது இடத்தையும் பெற்றுள்ளார்கள்.
ஆகக் கடைசி..
பட்டியலில் தமிழகம், புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் (திரிவேந்திர சிங் ராவத் – பாஜக) மாநில மக்கள் தங்கள் அரசை கடுமையாக சாடியுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் போதிய வேலை வாய்ப்பின்மை போன்றன அரசுகளுக்கு எதிர்மறையான புள்ளிகளை பெற்றுத்தந்துள்ளன. சிறப்பாக செயல்பட்ட முதல்வர் பட்டியலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடைசி இடத்தில் உள்ளார். 42% அவரின் செயல்பாடு, நிர்வாகம் ஆகியவை திருப்திகரமாக இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆளும் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றன. சிறப்பிலும் சிறப்பாக அண்ணன் எடப்பாடி அவர்கள், தானும் கடைசி இடத்தை பெற்றதுமில்லாமல் அரசு நிர்வாகத்தையும் தன்னோடு கடைசி இடத்திலேயே வைத்துக்கொண்டுள்ளார். அடுத்த கருத்துக்கணிப்பிலாவது முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடிக்குமாறு வலியுறுத்துவோம்.