இந்தியாவின் 70 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கென தனி அரசியலமைப்பு சாசனத்தை அமல்படுத்திய நாளே குடியரசு தினமாகும். பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்டிருக்கிறது. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்திய அரசு ஜனவரி 26 ஆம் தேதிக்காக காத்துக்கொண்டிருந்தது. ஏன் குறிப்பாக அந்தநாளை இந்திய அரசு தேர்ந்தெடுத்தது? அதற்கான காரணம் ஒன்று இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரஸ்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதிலேயே அதிக தொண்டர்களைக் கொண்ட அமைப்பென்றால் அந்நாளைய காங்கிரஸ் கட்சிதான். இந்தியா முழுவதும் இருள் பரவியிருந்த நேரத்தில் மெழுகுவர்த்திகளைத் தாங்கியபடி நடந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஒவ்வொரு வருடமும் அதன் மாநாடு ஒவ்வொரு இடங்களில் நடத்தப்படும். அப்படி 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த மாநாட்டில் தான் மோதிலால் நேரு காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி தன்னுடைய மகன் ஜவஹர்லால் நேருவை தலைவராக்கினார். காங்கிரஸ் உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் பெயராலேயே பொறுப்பானது நேருவிற்குக் கிடைத்தது. அதே மாநாட்டில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. காங்கிரசின் ஒரே நோக்கம் பரிபூரண சுதந்திரம் என்று முழங்கினார் நேரு. மேலும் இந்த கருத்தை வலுப்படுத்த, இந்தநாளை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர தினமாக அறிவித்தது காங்கிரஸ்.

சுதந்திர தினம்
காங்கிரசின் முடிவின்படி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக ஜனவரி 26 கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதால் அதனை சுதந்திர தினமாக (ஆகஸ்ட் 15) ஏற்றுக்கொண்டது இந்திய அரசு. ஆனாலும் சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக இலட்சியக்கனவின் சாட்சியாக இருந்த நாளை கைவிட அப்போதைய நேருவின் தலைமையிலான அரசு விரும்பவில்லை.
அதன் காரணமாகவே 1949 நவம்பரில் தாக்கல் செய்யப்பட அரசியலமைப்புச்சட்டத்தை இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக அறிவித்தது இந்திய அரசு. நாட்டின் இறையாண்மையை காப்பதற்கு, நல்ல குடிமகனாக வாழ்வதற்கு அரசியல் அமைபுச்சட்டத்தை மதித்திடல் வேண்டும். அனைவருக்கும் எழுத்தாணியின் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்
