இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதால் “நவீன இந்தியாவின் சிற்பி” எனக் கருதப்படுகிறார் ஜவகர்லால் நேரு.
பிறப்பு
ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில், 14 நவம்பர், 1889 – இல் பிறந்தார். இவர் செல்வந்தரும் வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாவார். விஜயலட்சுமி பண்டிட், கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் நேருவுக்கு இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இங்கிலாந்தில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய நேரு அவர்கள், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்தார். அங்கு 1910 – இல் பட்டம்பெற்ற பின்னர் கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.
திருமண வாழ்க்கை
நேரு அவர்கள், 1916 – இல் கமலா கவுல் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள். அவர் தான் இந்திரா காந்தி!
நேருவின் மனைவியான கமலா நேரு, 1936 – இல் புற்று நோயால் இறந்தார். மனைவியின் இறப்பிற்குப் பிறகு, கடைசி வரை தனியாகவே வாழ்ந்தார் நேரு!
அரசியல் வாழ்க்கை
1919 – இல் அப்பாவி மக்கள் மீது ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது. இப்படுகொலை தான் நேருவை தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. இதனால் இந்திய விடுதலைக்கு குரல்கொடுக்க காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட நேருவும் அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதைத் தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர். காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920 – இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921 – இல் முதன் முதலாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர், ஜனவரி 26, 1930 – இல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேருவுக்கு, ஆகஸ்ட் 15, 1947 அன்று புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார்.
இந்தியாவின் முதல் பிரதமராக நேருவின் பணிகள்
‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்திருந்தார் நேரு. அதனால் அவர் நிறைய திட்டங்களை செயல்படுத்தினார்.
- நேரு பிரதமராக இருந்த காலம் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை. தான் இறக்கும் வரை பிரதமராக இருந்தார்.
- 1951 – இல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கினார். இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்துக்கான பணியைத் தொடங்கினார்.
- 1952 – இல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது.
- அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்(IIT), இந்திய மேலாண்மைக் கழகங்கள்(IIM), தேசிய தொழில்நுட்பக் கழகங்கள்(NIT) போன்ற அரசு உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்.
- இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.
இறப்பு
மே 27, 1964 – அன்று நேரு மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவு தான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. அதனால் அவர் நவீன இந்தியாவின் சிற்பி.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.